ADDED : ஜூலை 13, 2024 12:51 AM

மேட்டுப்பாளையம்;காரமடையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று, நேற்றுமாலை காரமடை அருகே அதிவேகமாக வந்தது. அப்போது தனியார் திருமண மண்டபம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த முட்டை லாரி மற்றும் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியில் இருந்து மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக் கொண்டிருந்த ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன், 52, சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஸ்கூட்டரில் இருந்த புங்கம்பாளையத்தை சேர்ந்த பூபால், 29, படுகாயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனியார் பஸ் ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி வைரலாகியது.

