/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிகிச்சையின் போது கர்ப்பிணி மரணம்; ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
சிகிச்சையின் போது கர்ப்பிணி மரணம்; ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சிகிச்சையின் போது கர்ப்பிணி மரணம்; ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சிகிச்சையின் போது கர்ப்பிணி மரணம்; ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : மார் 11, 2025 04:16 AM
கோவை : சிகிச்சையின் போது உயிரிழந்த கர்ப்பிணி குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தனியார் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது.
கோவை, பி.என்.புதுார், கே.கே.காலனியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் சந்தியாவுக்கும், சுனில்குமார் என்பவருக்கும் 2022, அக்., 30ல் திருமணம் நடந்தது.
சந்தியா கர்ப்பம் அடைந்ததால், அதே பகுதியிலுள்ள சிவசாந்தா மருத்துவமனையில் ரெகுலராக மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில், 2023, பிப்., 20ல் காய்ச்சல் ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை மோசமானதால், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிப்., 25ல் உயிரிழந்தார். சரியாக சிகிச்சை அளிக்காததால் சந்தியா இறந்து விட்டதாக, தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம், மோகன் நேரடியாக புகார் அளித்தார். அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.
இழப்பீடு கோரி, மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. புகாரின் பேரில், சுகாதார துறை துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் மருத்துவ ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர். அதில், தனியார் மருத்துவர்கள் சிகிச்சையில் குறைபாடு செய்ததால், அவர் இறப்புக்கு காரணம் என்று சான்றிதழ் அளித்தனர்.
இதையடுத்து, இழப்பீடு வழங்க கோரி, மோகன், இவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளித்த போது, சேவை குறைபாடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 20 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.