கோத்தகிரி சாலையில் நிலச்சரிவை தடுக்க 'அலர்ட்' பாதுகாப்பு கவசம்!:கூடுதல் இடங்களில் மண் அணி அமைக்க திட்டம்
கோத்தகிரி சாலையில் நிலச்சரிவை தடுக்க 'அலர்ட்' பாதுகாப்பு கவசம்!:கூடுதல் இடங்களில் மண் அணி அமைக்க திட்டம்
UPDATED : ஜூலை 18, 2026 05:46 AM
ADDED : ஜூலை 17, 2026 04:11 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் -- கோத்தகிரி சாலையில் மழையினால் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, மண் ஆணி அமைக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் அபாயகரமான பகுதிகளில் மணல் மூட்டைகளால் பாதுகாப்பு ஏற்படுத்தவும், கூடுதல் இடங்களில் மண் அணி அமைக்கவும், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2023 நவ., மாதம், நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் -- கோத்தகிரி சாலையில், வியூ பாயிண்ட் மற்றும் குஞ்சப்பனை அருகே, மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்தும், மீண்டும் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்கவும், மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வல்லுநர் குழு வாயிலாக ஆய்வு செய்தனர்.
குழுவின் பரிந்துரை படி, நிலச்சரிவை தடுக்க ரூ.4 கோடியில், மூன்று இடங்களில், 'மண் ஆணி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, மலையின் செங்குத்தான சரிவில் மண்ணரிப்பை தடுத்து, நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க, 'ஜியோ கிரிட்' வழியாக மண்ணின் உறுதித்தன்மையை அதிகரித்து, 'ஹைட்ரோ சீடிங்' முறையில், புல் வளர்க்கப்படுகிறது; இது மண் சரிவை தடுக்கிறது. தற்போது பருவமழை துவங்கி உள்ள நிலையில், நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்தாண்டு பெய்த கன மழையிலும் கூட, ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்டு அங்கு மண் அணி அமைத்த இடங்களில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படவில்லை. தற்போது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு அருகில், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் முன்னெச்சரிக்கையாக, மணல் மூட்டைகள் வைக்கப்பட உள்ளன. இதற்காக 1,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. மண் ஆணி திட்டம் வெற்றியடைந்துள்ளதால், கூடுதல் இடங்களில் மண் ஆணி அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஆய்வு, விரைவில் வல்லுநர் குழு வாயிலாக துவங்கும். மேட்டுப்பாளையம் --- கோத்தகிரி சாலையில், மக்கள் பாதுகாப்பாக பயணிக்க, சாலை பராமரிப்பு, கீழே விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றுதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.---
