/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை - மனித மோதலை தடுக்க பிராந்திய செயல்திட்டம்
/
யானை - மனித மோதலை தடுக்க பிராந்திய செயல்திட்டம்
ADDED : செப் 07, 2024 04:59 AM

கோவை : மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில், யானை- -மனிதர் மோதலைத் தடுப்பதற்கு, பிராந்திய அளவில் செயல்திட்டம் வகுப்பதற்கான, தென் மாநில கலந்தாய்வுக் கூட்டம் கோவையில் நடந்தது.
மத்திய அரசின் வனத்துறை சிறப்பு செயலரும், வனத்துறை தலைவருமான ஜிதேந்திர குமார் தலைமை வகித்தார். தமிழக அரசின் வனத்துறை தலைவர் சுதான்ஷு குப்தா, கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமை வன உயிரின பாதுகாவலர்கள் பங்கேற்று, தங்களது மாநிலங்களின் யானை—மனித மோதல்கள் குறித்து விளக்கினர்.
யானைகள் வாழும் இந்த நான்கு தென் மாநிலங்களில், யானை மனித மோதல்களை நிர்வகித்தல் மற்றும் புரிந்து கொள்ளுதல் குறித்த, ஒருங்கிணைந்த பிராந்திய அளவிலான செயல்திட்டம் வகுப்பது குறித்து, தமிழகத்தின் முன்னாள் முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா விளக்கினார்.
நிகழ்ச்சியில், மத்திய அரசின் யானைகள் திட்ட இயக்குனர் ரமேஷ் பாண்டே, தமிழக வனத்துறை செயலர் செந்தில்குமார் உட்பட தலைமை வனப் பாதுகாவலர்கள், கள இயக்குநர்கள், மாவட்ட வன அலுவலர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வளர்ப்பு யானைகள் நல மேம்பாடு குறித்து, தனியார் யானை உரிமையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு நடந்தது.
இதில், நாடு முழுவதும் இருந்து வனத்துறை கால்நடை மருத்துவர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்று, யானைகளைப் பராமரிக்கும் கோவில்களின் நிர்வாகிகள், தனியார் யானை உரிமையாளர்கள், பாகன்களுக்கு யானை நலம் குறித்து பயிற்சி அளித்தனர்.