/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி மலை அடிவாரத்தில் ஐந்து கடமான்கள் விடுவிப்பு
/
சிறுவாணி மலை அடிவாரத்தில் ஐந்து கடமான்கள் விடுவிப்பு
சிறுவாணி மலை அடிவாரத்தில் ஐந்து கடமான்கள் விடுவிப்பு
சிறுவாணி மலை அடிவாரத்தில் ஐந்து கடமான்கள் விடுவிப்பு
ADDED : ஜூலை 13, 2024 12:38 AM

கோவை;சிறுவாணி மலை அடிவாரம் வனப்பகுதியில் மேலும் ஐந்து கடமான்கள் விடுவிக்கப்பட்டது.
கோவை வ.உ.சி., வன உயிரியல் பூங்காவிற்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து இந்திய அரசால் மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அதில் பராமரிக்கப்படும் அட்டவணை வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவித்திட, சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்தார்.
இதையடுத்து கோவை வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருக்கும் அட்டவணை வன உயிரினங்களை மாற்றம் செய்திட தமிழக வனத்துறையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வ.உ.சி., பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளி மான்கள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பூங்காவில் உள்ள கடமான் மாற்றம் செய்ய திட்டமிட்டு அதன் புழுக்கைகளை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு கடமான்களுக்கு காசநோய் தொற்று எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு, கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கடமான்களை வனப்பகுதிக்கு மாற்றம் செய்திட ஏதுவாக கோவை மாநகராட்சி மினி லாரியில் வனத்துறை வாயிலாக கூண்டு கட்டமைக்கப்பட்டது.
நேற்று கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் போளுவாம்பட்டி வன பணியாளர்கள், கோவை வனமண்டல வன கால்நடை அலுவலர், வ.உ.சி., வன உயிரியல் பூங்கா இயக்குனர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் கோவை மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் ஐந்து கடமான்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சரகம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
மேலும், கடமான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த, 4ம் தேதி ஐந்து கடமான்கள் போளுவாம்பட்டி சரக காப்பு காட்டில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

