ADDED : ஜூன் 29, 2026 05:30 PM
ஆனைமலை: ஆனைமலை குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, மக்கள் சக்தி நகரில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்ததில், மளமளவென தீ வேகமாக பரவி, புகை மூட்டமாக காட்சியளித்தது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகை சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஆனைமலை பேரூராட்சியின் மையப்பகுதியில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இதில், தீ விபத்து நடந்ததால், சுற்றுப்பகுதியில் பெரும்பாலும் புகை பரவியது. இதனால் குழந்தைகள் முகள் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டனர். எனவே, இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்’ என்றனர்.
