/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனங்களில் 'பறக்கும்' பள்ளி மாணவர்கள்
/
வாகனங்களில் 'பறக்கும்' பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 12, 2024 01:32 AM
உடுமலை;உடுமலை குடியிருப்பு வீதிகளில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்கள் அதிவேகமாக பயணம் செய்கின்றனர்.
பள்ளி மாணவர்கள், இப்போது பயிற்சி ஓட்டுநர் உரிமம் மட்டும் எடுத்து விட்டு, சரளமாக வாகனங்களில் வலம் வருகின்றனர். ஆனால், அந்த உரிமங்களை ஒருமுறை எடுப்பதுடன் விட்டு விடுகின்றனர். முறையாக புதுப்பிப்பதும் இல்லை.
நகரின் பிரதான ரோடுகளில், போக்குவரத்து போலீசார் கண்காணிப்பதால், குடியிருப்புகளின் வழியாக செல்கின்றனர்.
இருசக்கர வாகனங்களில் வரவேண்டாமென பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினாலும், வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு பள்ளிக்குச்செல்கின்றனர்.
முறையான உரிமம் இல்லாமலும், தலைக்கவசம் அணியாமலும், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் செல்வது என, மாணவர்கள் ஆபத்தை உணராமல் செல்கின்றனர்.
பழனியாண்டவர் நகர், ஆண்டாள் சீனிவாசன் லே - அவுட், அண்ணா குடியிருப்பு, ஐஸ்வர்யா நகர், சர்தார் வீதிகளின் வழியாக காலையிலும், மாலையிலும் இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் அபாயகரமான பயணம் செய்கின்றனர்.
இவ்வாறு வேகமாக வாகனங்களில் வரும் மாணவர்கள், எதிரே வரும் பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில், வாகனத்தை தடுமாற்றத்துடன் ஓட்டுகின்றனர். இதனால் வீதிகளில் நடப்போரும், இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவர்களை கண்டு அஞ்சுகின்றனர்.
போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, இதுபோன்ற ஆபத்தான பயணத்தை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

