/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கமிஷனரா ஓட்டு கேட்டு போகிறார்; நாம தானே போகணும்! * புதிதாக பொருத்திய தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை * மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
/
கமிஷனரா ஓட்டு கேட்டு போகிறார்; நாம தானே போகணும்! * புதிதாக பொருத்திய தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை * மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
கமிஷனரா ஓட்டு கேட்டு போகிறார்; நாம தானே போகணும்! * புதிதாக பொருத்திய தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை * மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
கமிஷனரா ஓட்டு கேட்டு போகிறார்; நாம தானே போகணும்! * புதிதாக பொருத்திய தெருவிளக்குகள் ஒளிர்வதில்லை * மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
ADDED : ஆக 22, 2024 11:28 PM
கோவை:'கோவை மாநகராட்சி பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட தெருவிளக்குகளில் பெரும்பாலானவை எரிவதில்லை; பராமரிப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனத்தினர் வருவதில்லை. அவர்களுக்குரிய பில் தொகையை வழங்கக்கூடாது' என, மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடுக்கடுக்காக புகார்களை அடுக்கினர்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம், அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது; மண்டல தலைவர் தெய்வயானை தலைமை வகித்தார். உதவி கமிஷனர் சந்தியா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
கார்த்திக் செல்வராஜ், 72வது வார்டு:
மண்டல கூட்டங்களில் நிறைவேற்றும் தீர்மானங்கள் எத்தனை மாதங்களுக்கு நிறைவேற்றப்படும் என கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும். ஆறு மாதங்களாகியும் வேலை நடக்கவில்லை. ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்காமல் நிலுவை வைத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆர்.எஸ்.புரம் பகுதியில் விளம்பர பலகைகள் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன; அனுமதி பெறப்பட்டுள்ளனவா.
அங்குலட்சுமி, 75வது வார்டு:
பாப்கார்டு, ஜெ.சி.பி., வண்டியை வார்டு வேலைக்கு அனுப்புங்க. ஒரு மாதமாக கேட்கிறோம்; ரிப்பேர் என்றே பதில் வருகிறது. சாக்கடை கால்வாயில், 140 இடங்களில் கழிவு நீர் தேங்கியிருக்கிறது. ரோடு போடுவதற்கான டெண்டர் கோரப்பட்டு ஓராண்டாகி விட்டது; இன்னும் வேலை நடக்கவில்லை.
மாலதி, கல்விக்குழு தலைவர்:
மக்கும் குப்பை சேகரிக்க மட்டும் ஆர்வம் காட்டுகின்றனர். மற்ற குப்பையை கண்டுகொள்வதில்லை. மாநகராட்சி ஊழியர்களை கசக்கிப் பிழிகிறார்கள். ஒப்பந்த நிறுவனத்தினர் கூடுதலாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும். ஆன்-லைனில் பொதுமக்கள் புகார் கூறினால், 10 நிமிடத்தில் தீர்வு காணப்படுகிறது. நாங்கள் (கவுன்சிலர்கள்) சொன்னால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தேர்தலில், கமிஷனரா ஓட்டுப் கேட்டு போகப்போகிறார்; நாம தானே ஓட்டு கேட்டு போக வேண்டும்.
பேபி சுதா, 45வது வார்டு:
வார்டுக்குள் வேலை செய்ய வருபவர்கள், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் செய்கிறார்கள். நாய் பிடிப்பவர்களை, மண்டல கூட்டத்துக்கு வரச் சொல்லுங்கள். ஒரு வார்டில் எத்தனை நாய் பிடிக்கப்பட்டது என்கிற, லிஸ்ட் தர வேண்டும். ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுக்கிறார்கள்; வேலை செய்வதில்லை; பில் மட்டும் வாங்கி விட்டுச் செல்கிறார்கள். தெருவிளக்கு பராமரிப்பு மோசமாக இருக்கிறது; அதற்கான பில் தொகை தராதீர்கள். பராமரிப்பு பணி செய்ததற்காக, 'கூகுள் மேப்' போட்டோ ஆதாரமாக கேளுங்கள்.
சம்பத், 35வது வார்டு:
புதிதாக தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. 40 இடங்களில் புதிய தெருவிளக்குகள் எரிவதில்லை. நாங்கள் சொல்லும் இடத்தில் தெருவிளக்கு பொருத்துவதில்லை. கஞ்சா விற்பனையை தடுக்கவும், செயின் வழிப்பறி சம்பவம் நடப்பதை தடுக்கவும் இருட்டான பகுதிகளில் தெருவிளக்கு அமைக்கச் சொன்னால், அங்கு மாட்டுவதில்லை. தெருவிளக்கு இருக்கும் இடங்களிலேயே திரும்பவும் மாட்டுகின்றனர். கம்பளி பூச்சி தொல்லை அதிகமாக இருக்கிறது; மருந்து அடிக்க வேண்டும். நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. பெட்டிக்கடைகளுக்கு குழந்தைகள் மிட்டாய் வாங்கக் கூட போக முடியவில்லை.
குமுதம், 37வது வார்டு:
வரி போட்டுத்தரச் சொல்லி விண்ணப்பம் கொடுத்தால் எத்தனை நாட்களாகும். காலியிட வரிக்கு மனு கொடுத்தால் நான்கு மாதங்களாக அலைய விடுகிறீர்கள்.
லட்சுமி, 39வது வார்டு:
அஜ்ஜயனுாரில் குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் வாரிய உதவி பொறியாளரிடம் கேட்டால், 'நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்' என, கூறுகிறார். கவுன்சிலர் கேள்வி கேட்காமல் வேறு யார் கேட்பார்கள். இன்று வரை உடைப்பை சரி செய்யவில்லை.
பத்மாவதி, 40வது வார்டு:
மாநகராட்சியில் நிதியில்லை என்கிறீர்கள். வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026 தேர்தலுக்குள் மக்களிடம் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பணிகள் செய்ய வேண்டும். மக்களை நாம் தான் சந்திக்கப் போகிறோம். வளர்ச்சி பணிகள் செய்ய அரசிடம் இருந்து தேவையான நிதி பெற வேண்டும்.
சாந்தி, 41வது வார்டு:
குப்பை எடுத்துச் செல்ல வாகனங்கள் வருவதில்லை; ரிப்பேர் என சொல்கிறார்கள். பழுதை சரி செய்ய எத்தனை மணி நேரமாகும். பழுதை சரிபார்த்து வாகனம் வருவதற்கு ஒரு வாரமாகிறது. வார்டுக்குள் குப்பை தேங்குகிறது. காலை, 8:00 மணிக்குள் குப்பையை அள்ளினால் மட்டுமே நகரம் சுத்தமாகும்.
மண்டல தலைவர் தெய்வயானை:
'மாஸ் கிளீனிங்' பணி முறைப்படுத்தப்படும்; எத்தனை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என பட்டியலிட்டு கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும். குப்பை எடுக்கும் தனியார் நிறுவன ஒப்பந்தம் முடிந்து விட்டது; புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கும் வரை பழைய ஒப்பந்ததாரரே பணி செய்வார்.
இவ்வாறு, கவுன்சிலர்கள் கூறினர்.