வால்பாறையில் பயன்பாட்டிற்கு வராத படகு இல்லம்... காட்சி பொருளானது!:நகராட்சி சீரமைக்க சுற்றுலா பயணியர் வலியுறுத்தல்
வால்பாறையில் பயன்பாட்டிற்கு வராத படகு இல்லம்... காட்சி பொருளானது!:நகராட்சி சீரமைக்க சுற்றுலா பயணியர் வலியுறுத்தல்
UPDATED : ஆக 03, 2026 04:59 AM
ADDED : ஆக 02, 2026 04:40 PM

வால்பாறை: வால்பாறையில், பயன்பாட்டிற்கு வராத படகு இல்லத்தால், அங்கு வரும் சுற்றுலாபயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர். வால்பாறைக்கு சுற்றுலாவரும் பயணியரை மகிழ்விக்க, நகராட்சி சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு படகு இல்லம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படகு சவாரியும் துவங்கப்பட்டதால், உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, படகு இல்லம் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது.
ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட படகு இல்லம் காட்சிப்பொருளாக மாறி வருவதால், உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் கவலையடைந்துள்ளனர்.
சுற்றுலாபயணியர் கூறியதாவது:
வால்பாறையில் பருவ மழை பெய்து வரும் நிலையில், குளு குளு சீதோஷ்ண நிலை நிலவுவதால், இயற்கை அழகை கண்டு ரசிக்க குடும்பத்துடன் வந்துள்ளோம்.
ஆனால் இங்கு உள்ள படகு இல்லம், கழிவு நீர் மற்றும் ஆகாயத்தாமரை படர்ந்த நிலையில், அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால் படகுசவாரியில் பயணம் செய்ய முடியாமல், சுற்றுலாபயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், மக்கள் வரிப்பணம் வீணாவதோடு, நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாபயணியர் நலன் கருதி படகு இல்லத்தை உடனடியாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தற்போது மழை பெய்து வரும் நிலையில் கழிவு நீர் தேங்கி, படகு இல்லம் புதர்மண்டிக்கிடக்கிறது. இதனால் தான் படகுசவாரி தற்போது இயக்க முடியாத நிலை உள்ளது. படகு இல்லம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில், மழைக்கு பின் டெண்டர் விடப்பட்டு, மிக விரைவில் பணிகள் துவங்கப்படும். அதன் பின் வழக்கம் போல் படகுசவாரி துவங்கப்படும்' என்றார்.
