ADDED : ஆக 07, 2026 05:11 PM
l போதை பொருள் கடத்தலை தடுக்க... l கூரியர், பார்சல் நிறுவனங்களுக்கு அறிவுரை-
பெ.நா.பாளையம்: ‘போதை பொருள் கடத்தலை தடுக்க, தனியார் கூரியர் சேவை நிறுவனங்கள், பார்சல் கையாளும் நிறுவனங்கள், உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். போதை பொருள் நடமாட்டம் தடுக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு, போதை பொருள் விற்கும் நபர்கள் குறித்த விபரங்கள் பதிவிட, போலீசார் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தவிர, தினமும் மாலை வேலைகளில், முக்கிய சந்திப்புகளில், போலீசார் சென்று, போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், தனியார் கூரியர் சேவை நிறுவனங்கள், பார்சல் கையாளும் நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கஞ்சா உட்பட போதை பொருட்கள், மனநல பாதிப்பு ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் மற்றும் பிற போதை பொருட்களை, கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் வாயிலாக கடத்தப்படுவது தடுக்க வேண்டும். இதற்காக இந்நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர்.
குறிப்பாக, பார்சல்களை ஏற்கும் முன், அனுப்பும் நபரின் அடையாளம் மற்றும் தொடர்பு விபரங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். முழுமையற்ற முகவரி, தவறான மொபைல் எண் அல்லது சந்தேகத்திற்கிடமான விபரங்களுடன் பதிவு செய்யப்படும் பார்சல்களை, கூடுதல் கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது கல்லுாரி மாணவர்கள் சார்பில், முழுமையற்ற விபரங்களுடன், அடிக்கடி அனுப்பப்படும் பார்சல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பணியாளர்கள் அனைவரும், வழக்கத்திற்கு மாறான முன்பதிவு நடைமுறைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய வாடிக்கையாளர்களின் செயல்பாடுகள் குறித்து, எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகிக்கப்படும் பார்சல்கள் குறித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கூரியர், பார்சல் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து, போதை பொருள் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில், எந்த ஊழியரும் ஈடுபடவில்லை என, நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். போதை பொருட்களை தெரிந்து கடத்துதல், கடத்தலுக்கு துணை புரிதல், சட்டவிரோத போக்குவரத்துக்கு உதவுதல், சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், வேண்டுமென்றே மறைத்தல் உட்பட செயல்களில் ஈடுபடும் கூரியர் நிறுவனங்களின் ஊழியர்கள் மீது, உரிய சட்ட பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
