ADDED : ஜூலை 26, 2026 03:51 PM
பணம் செலுத்தியும் அடுக்குமாடி குடியிருப்புகள்... பயன்பாட்டுக்கு வராததால் பயனாளிகள் தவிப்பு
வால்பாறை: வால்பாறையில், பணம் செலுத்தியும், முழுமை பெறாத பணியால், பயன்பாட்டிற்கு வராத அடுக்குமாடி குடியிருப்புக்களால், பயனாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். வால்பாறை நகரில் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டுவாரியத்தின், சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 12 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 80 அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பணி முழுமையாக நிறைவு பெறாத நிலையில், கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர், 25 பேருக்கு வீட்டிற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். ஆனால் அவர்களுக்கு இது வரை வீட்டின் சாவி வழங்கப்படவில்லை.
இதனிடையே கடந்த மார்ச் மாதம், சட்ட சபை தேர்தலுக்கு முன்னதாக மீதமுள்ள வீடுகளை, அப்போதைய தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அடுக்குமாடி கட்டடிப்பணி முழுமைபெறாத நிலையில், பணம் செலுத்தியுள்ள பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படாததால், அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பயனாளிகள் கூறியதாவது:
தொகுப்பு வீட்டிற்காக, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தலா, ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளோம். ஆனால் இன்று வரை வீடு எங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை. மின் இணைப்பு இது வரை வழங்கப்படவில்லை.
பணி முழுமையாக நிறைவு பெறாத நிலையில், திறப்பு விழா மட்டும் கடந்த ஆட்சியில் நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியிலாவது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை தமிழக அரசு முறைப்படி ஒப்படைக்க வேண்டும்.
அதற்கு முன்னதாக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் கட்டப்பட்டுள்ள, 80 வீடுகளில் பணி நிறைவடைந்துள்ளது. இதில் இரண்டு கட்டமாக, 70 வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பத்து வீடுகள் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் மின் இணைப்பு வழங்கியபின், வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஆபத்தான நிலயைில் உள்ள மரங்களை அகற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த பணி நிறைவடைந்த பின், மின்வாரியத்தின் வாயிலாக வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். அதன் பின் தேர்வு செய்த பயனாளி அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
