ADDED : ஜூலை 30, 2026 05:44 PM
l உரம் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் விலை அதிகம் l விவசாயம் மேற்கொள்வதில் தொடரும் சிக்கல்
அன்னுார்: சில உரங்கள் கிடைக்காததாலும், கிடைக்கும் உரங்கள் விலை அதிகம் என்பதாலும், விவசாயம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அன்னுார் வட்டாரத்தில், 20 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில், கரும்பு, வாழை, மஞ்சள், நிலக்கடலை, சோளம், பருத்தி, காய்கறி, பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில், கிணற்று பாசனத்தை நம்பியும், சில இடங்களில் மானாவாரியாகவும் பயிரிடப்படுகிறது. சில வாரங்களாக உரங்களின் விலை உயர்வு மற்றும் உரங்கள் கிடைக்காததால், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து, கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க தலைவர் முருகசாமி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:
கரும்பு, வாழை, மஞ்சள் உட்பட பயிர்களுக்கு, முக்கியமாக டி.ஏ.பி., உரம் தேவைப்படுகிறது. 25 கிலோ எடையுள்ள டி.ஏ.பி., உரம் 1,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு மாதமாக இந்த உரம் கிடைப்பதில்லை. பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்டம் பாஸ் உரம் 50 கிலோ மூட்டை 1,525 ரூபாயிலிருந்து 2,250 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பொட்டாஸ் உரம் ஒரு மூட்டை 1,600 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. சல்பேட் உரம் 50 கிலோ மூட்டை 910 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாக உயர்ந்துள்ளது. உரம் விலை உயர்வால் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளோம். விவசாயமே செய்ய முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அவருக்கு சொந்தமான நிலத்தை கணக்கிட்டு, பயிருக்கு ஏற்ப மானியத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்க வேண்டும். தவறினால், விவசாயமே தொடர்ந்து செய்ய முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
‘அட்மா’ திட்ட முன்னாள் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
விவசாய தொழிலாளர்களின் தினசரி சம்பளம், 900 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. குளம், குட்டைகள் காய்ந்து போய் விளையாட்டு மைதானமாக காட்சியளிக்கின்றன. பல ஆயிரம் ரூபாய் செலவழித்து தண்ணீர் வாங்கி பயிர்களுக்கு ஊற்றி வருகிறோம். விளைப்பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. தக்காளி தோட்டத்துக்கு வந்து, ஒரு கிலோ ஐந்து ரூபாய்க்கு கேட்கின்றனர்.
உப தொழிலாக கால்நடைகளை வளர்த்து வருகிறோம். அதுவும், ஆவினில் பாலுக்கு தரும் விலை கட்டுபடியாகவில்லை. தீவன விலை அதிகரித்து விட்டது. அரசு, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். தீவனங்களை மானிய விலையில் தர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
