/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 16, 2025 07:38 AM

கோவை; ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கோவை கலெக்டர் அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கவில்லை. இச்சேவையை செயல்படுத்தி வரும் ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம், 10 சதவீதமே ஊதிய உயர்வு வழங்கியுள்ளது.
தமிழக அரசிடம் முறையிட்டபோது, தொழிலாளர்கள் பிரச்னையில் தலையிட மாட்டோம் என தெரிவித்து விட்டது. 100 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை, தனியார் நிறுவனத்திடம் கொடுத்து விட்டு, அது முறையாக செலவிடப்படுகிறதா, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது.
விலைவாசி உயர்வு அடிப்படையில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதை வலியுறுத்தியே போராட்டம் நடத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. அவசர சேவை என்பதால், ஆம்புலன்ஸ்களை இயக்கி வருகிறோம். அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். கோவை மாவட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.