/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணித திறனறிதல் தேர்வு 750 மாணவர்கள் பங்கேற்பு
/
கணித திறனறிதல் தேர்வு 750 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 09, 2026 06:45 AM

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் கணித திறனறிதல் தேர்வை உடுமலை, பொள்ளாச்சி பகுதியில், 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று எழுதினர்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சென்னை மற்றும் கோவை மண்டல அறிவியல் மையம் வழிகாட்டுதலின்படி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைப்பில், கணித திறனறிதல் தேர்வு உடுமலை பகுதி மையங்களில் நடந்தது. இத்தேர்வினை ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாணவியர் எழுதினர்.
சின்ன வீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிளுவங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கொ. வல்லக்குண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆர்.கே.ஆர் கிரிக்ஸ்., மேல்நிலைப்பள்ளி, அமேசான் பப்ளிக் பள்ளி, சோழமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய ஆறு மையங்களில் நடந்தது; 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர்.
தேர்வுக்கான ஏற்பாடுகளை, உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மற்றும் ஆசிரியர் தன்னார்வலர்கள் ரவிக்குமார், பாண்டி செல்வி, கிருஷ்ணவேணி, சபர்ணி மற்றும் கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர். இத்தேர்வில், வகுப்பு வாரியாக சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசுகளும் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.
நேற்று தேர்வில், பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் அந்தந்த தேர்வு மையங்களிலேயே வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி பொள்ளாச்சி, வி.எஸ்.ஆர்.ஏ. நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (சென்னை) மற்றும் கோவை மண்டல அறிவியல் மையம் வழிகாட்டுதலின்படி உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைப்பில் கணித திறனறிதல் தேர்வு நடந்தது.
பள்ளி மாணவர்களிடையே, கணித திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வானது மண்டல அறிவியல் மையங்களில் நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்தத் தேர்வு நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- நிருபர் குழு -:

