/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
9 மாதங்களில் நடந்த 290 சாலை விபத்துக்களில் 88 பேர் இறந்துள்ளனர்! குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே காரணம்
/
9 மாதங்களில் நடந்த 290 சாலை விபத்துக்களில் 88 பேர் இறந்துள்ளனர்! குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே காரணம்
9 மாதங்களில் நடந்த 290 சாலை விபத்துக்களில் 88 பேர் இறந்துள்ளனர்! குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே காரணம்
9 மாதங்களில் நடந்த 290 சாலை விபத்துக்களில் 88 பேர் இறந்துள்ளனர்! குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே காரணம்
ADDED : அக் 16, 2024 09:09 PM

மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-டிவிஷனில், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், பில்லூர் அணை என, ஐந்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில் அன்னூர், மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளும், சிறுமுகை, பில்லூர் அணை ஆகிய பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளின் வழியாக நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
உயிரிழப்பு
இதில், அன்றாடம் வேலைக்கு செல்பவர்களும், சுற்றுலா செல்பவர்களும் மிகவும் கவனமுடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
உள்ளூரில் நண்பர்களுடன் வாகனங்களில் சுற்றுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
மேலும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால், வளைவுகளில் திரும்பும் போதும், வாகனங்களை முந்தி செல்லும் போதும், எதிரே வரும் வாகனங்களிலோ அல்லது முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனங்களிலோ மோதி விபத்துக்கு உள்ளாகின்றன.
இதில் உயிரிழப்பும், அதிக அளவில் காயமும் அடைகின்றனர். மேட்டுப்பாளையம் சப்- டிவிஷனில் உள்ள ஐந்து போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை, 290 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். 88 பேர் சம்பவ இடத்திலேயும், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமலும் இறந்துள்ளனர்.
விழிப்புணர்வு
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் இளைஞர்கள் அதிவேகமாக நிதானம் இல்லாமல் ஓட்டுகின்றனர். அதில் சிலர் வாகனங்களை ஒட்டி செல்லும்போது சாகசம் செய்கின்றனர். மது போதையில் வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிவேகமாக செல்லும் வாகனங்களை, தங்கள் மகன்களுக்கு வாங்கித் தருவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது: போலீசார் சாலையில் ஏதாவது ஒரு பகுதியில் நின்று, வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்கின்றனர்.
அப்போது ஓட்டுநர் குடிபோதையில் இருந்தால், அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து, குடிபோதையில் வாகனங்களை ஓட்டினால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெற்றோர் முன்னிலையில் அவர்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அடுத்த முறை அதே நபர்கள் வேகமாகவோ, குடிபோதையிலோ வாகனங்களை ஓட்டி வந்தால்,அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.