ADDED : ஏப் 29, 2026 04:56 AM
கோவை: முன்னணி நிறுவனங்கள் முதல், சர்பத் கடை வரை, 93 குளிர்பான மாதிரிகளை உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
வெய்யிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தள்ளுவண்டி கடைகளும், குளிர்பான கடைகளாக மாறியுள்ளன. ரூ.10 க்கு ஜூஸ் என்ற அறிவிப்பை பல இடங்களில் பார்க்க முடிகிறது. வண்டிகளில் குச்சி, குல்பி ஐஸ் விற்பவர்களும் அதிகரித்துள்ளனர். தரமில்லாமல் தயாரிக்கும் பட்சத்தில் மக்களுக்கு 'புட்பாய்சன்' ஏற்படலாம்.
ஐஸ்கிரீம், குளிர்பான கடைகள், பழக்கடைகளை தொடர்ந்து ஆய்வு செய்ய, உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், இம்மாதத்தில் மட்டும் 93 குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
ஐஸ்கிரீம்களை 'ப்ரீசர் பாக்ஸ்'ல் எப்படி பராமரிக்க வேண்டும், அதை தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, தயாரிப்பு நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
இதுவரை, 93 குளிர்பான கடைகளை ஆய்வு செய்து மாதிரி சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் முடிவுகள் தெரியும். இதில், தரமில்லாமல் குளிர்பானம் தயாரித்தது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
அழுகிய பழம், அதிக செயற்கை கலர் சேர்த்தல், சுகாதாரமற்ற தண்ணீர் பயன்படுத்துதல் போன்ற புகார்கள் இருந்தால், 94440 42322 என்ற எண்ணில் தகவல் அனுப்பலாம்,'' என்றார்.
'மயோனைஸ் சாப்பிடும்
முன் கேள்வி கேளுங்க'
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மயோனைஸ் சாப்பிடும் முன் எப்படி தயாரிக்கப்பட்டது என கேட்பது அவசியம். இதை பார்த்தால் கண்டுபிடிக்க முடியாது. மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினால் தான் தெரிய வரும். எனவே, தடை செய்யப்பட்ட உணவை வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது என, உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.
