ADDED : ஆக 31, 2026 06:42 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பாலக்காடு ரோட்டில் நல்லுாரில் வழிகாட்டி பலகை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி – பாலக்காடு ரோடு சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின், ஜமீன்ஊத்துக்குளியில் துவங்கி, கோவை ரோடு ஆச்சிபட்டியில் இணையும் மேற்கு புறவழிச்சாலை பணிக்காக நல்லுாரில் இருந்த வழிகாட்டி பலகை அகற்றப்பட்டது.
பாலக்காடு ரோடு மற்றும் மேற்கு புறவழிச்சாலை சந்திப்பு பகுதி என்பதால், நல்லுாரில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த வழிகாட்டி பலகையை மறுபடியும் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை வழிகாட்டி பலகை அமைக்கவில்லை.
மாறாக, மேற்கு புறவழிச்சாலையில் பயணிக்கும் பயணிக்கும் வாகனங்களுக்கு வழிகாட்டும் வகையில் புதிய வழிகாட்டி பலகை அமைக்க திட்டமிடப்பட்டது. பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே ரோட்டின் ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட வேண்டிய வழிகாட்டி பலகை, ரோட்டின் ஓரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், இந்த வழித்தடத்தில் புதிதாக வருவோருக்கு, குழப்பம் ஏற்படுகிறது. எனவே, வழிகாட்டிப் பலகையை உரிய இடத்தில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
