/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானை தாக்கியதில் ஆதரவற்ற மூதாட்டி மரணம்
/
காட்டு யானை தாக்கியதில் ஆதரவற்ற மூதாட்டி மரணம்
ADDED : மார் 06, 2024 01:25 AM
தொண்டாமுத்தூர்:ஆறுமுககவுண்டனூரில், காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் காட்டு யானைகள் வெளியேறி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் இரவு, மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட ரேக்கன்டோ வனப்பகுதியில் இருந்து, 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் வெளியேறியுள்ளது.
அதில், 3 காட்டு யானைகள் மட்டும் தனியாக பிரிந்து, ஆறுமுகக்கவுண்டனூர், கங்கா நகர் செல்லும் வழியில் சென்றுள்ளன.
அப்போது, அங்குள்ள கருப்பராயன் கோவில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த சுமார், 60 வயதுள்ள மூதாட்டியை, காட்டு யானை தாக்கியுள்ளது.
இதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து மதுக்கரை வனத்துறையினர், பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி, கடந்த 6 மாதங்களாக, கருப்பராயன் கோவில் தங்கி, அருகில் உள்ளவர்களிடம் உணவு வாங்கி உண்டு வந்தது தெரியவந்தது.
அவரின் பெயர், ஊர் என அவரை பற்றி விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

