/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறுதி பட்டியல் கெடு நெருங்குவதால் முகவரி மாற்ற படிவங்கள் நிராகரிப்பு? ஆவணங்கள் சமர்ப்பித்தும் பலர் ஏமாற்றம்
/
இறுதி பட்டியல் கெடு நெருங்குவதால் முகவரி மாற்ற படிவங்கள் நிராகரிப்பு? ஆவணங்கள் சமர்ப்பித்தும் பலர் ஏமாற்றம்
இறுதி பட்டியல் கெடு நெருங்குவதால் முகவரி மாற்ற படிவங்கள் நிராகரிப்பு? ஆவணங்கள் சமர்ப்பித்தும் பலர் ஏமாற்றம்
இறுதி பட்டியல் கெடு நெருங்குவதால் முகவரி மாற்ற படிவங்கள் நிராகரிப்பு? ஆவணங்கள் சமர்ப்பித்தும் பலர் ஏமாற்றம்
ADDED : பிப் 12, 2026 05:01 AM

கோவை, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப். 17ம் தேதி வெளியாக உள்ளதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
முகவரிக்கு நேரில் சென்று சரி பார்ப்பது, ஆவணங்களை ஆன்லைனில் சரி பார்ப்பது போன்ற வேலைகள் அதிக நேரம் பிடிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். இதே வேகத்தில் வேலை நடந்தால், இறுதி பட்டியலை அறிவித்த தேதியில் வெளியிட முடியாது; எனவே, சீக்கிரம் முடித்து கொடுங்கள் என ஊழியர்களுக்கு அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முகவரி மாறியவர்கள் மற்றும் தொகுதி விட்டு தொகுதி மாறியவர்கள் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர்களுக்கு மொபைல் போனில் மெசேஜ் வருவதாக வாக்காளர்கள் கூறினர்.
“படிவத்தை முறையாக நிரப்பி கொடுத்து, ஆதார் போன்ற சான்றுகளின் நகல்களையும் இணைத்து போட்டோவுடன் கொடுத்தோம். உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என தேர்தல் கமிஷன் பெயரில் மெசேஜ் வந்தது. ஆனால், திடீரென 'உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என்று ஒரே வரியில் மெசேஜ் கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ளது ஆணையம்” என்றனர்.
என்ன காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்ற தகவலையும் சொல்லாமல் தவிர்ப்பதால், சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். “இத்தனை காலமாக பல தேர்தல்களில் ஓட்டு போட்டிருக்கிறேன். இடம் மாறிய விஷயத்தை சொல்லி, முகவரி மாற்ற சான்றுகள் கொடுத்து விண்ணப்பித்தால், காரணம் சொல்லாமலே நிராகரிக்கின்றனர். அப்படி என்றால், நாங்கள் இந்திய குடிமக்கள் அல்ல என்கிறதா, தேர்தல் ஆணையம்?” என்று கொதிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தில் ஒருவருடைய விண்ணப்பத்தை ஏற்று, அவருக்கு தேர்தல் கமிஷன் அடையாள அட்டை கொடுத்துள்ள நிலையில், அவரது மனைவி, குழந்தைகள் அளித்த விண்னப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன, என்பதால், தேர்தல் பிரிவு அதிகாரிகள் எந்த அளவுக்கு நேர்மையாக பணி செய்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
“சுப்ரீம் கோர்ட்டை கூட ஏதாவது சொல்லி திசை திருப்பலாம். நேர்மையான குடிமக்களின் ஓட்டுரிமையை காரணம் சொல்லாமல் பறிப்பதை ஏற்கவே முடியாது” என ஒரு வாக்காளர் கோபமாக கூறினார்.
ஆனால், தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'முகவரி மாற்றத்திற்கான சரியான ஆவணங்களை சமர்ப்பித்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாது. ஆதார், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்கள் இணைத்தால் விண்ணப்பம் ஏற்கப்படும். தனிப்பட்ட காரணங்களுக்காக நிராகரிப்பதில்லை,' என்று வழக்கமான பதிலை தந்தனர்.
பல துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால், இம்மாதிரி தவறுகள் நேர்கிறதா என கேட்டபோது ஒரு அதிகாரி பதிலளிக்க மறுத்து விட்டார்.

