/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய அடையாள எண் ஏப்., 15 வரை நீட்டிப்பு
/
விவசாய அடையாள எண் ஏப்., 15 வரை நீட்டிப்பு
ADDED : மார் 30, 2025 10:57 PM
பெ.நா.பாளையம்; அரசின் நலத்திட்டங்கள் பெற, விவசாய அடையாள எண் பதிவு செய்ய, ஏப்., 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை மற்றும் தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாக, அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க, வேளாண் அடுக்குத் திட்டம் (அக்ரி ஸ்டாக்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025 --26ம் நிதியாண்டு முதல், பிரதமரின் கவுரவ நிதி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசின் திட்டங்களில், விவசாயிகள் எளிதில் பயன்பெற, தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
தனித்துவ அடையாள எண் பெற்ற விவசாயிகள் மட்டுமே பிரதம மந்திரி கவுரவ நிதித் தொகை பெற முடியும்.
எனவே, விவசாயிகள் தங்கள் கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று, நில உடைமை விபரங்கள், ஆதார் எண், மொபைல் எண் ஆகிய விபரங்களை அளித்து, எவ்வித கட்டணமும் இன்றி ஏப்., 15ம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து, பயன்பெறுமாறு, கோவை வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.