ADDED : டிச 12, 2025 06:38 AM
பொள்ளாச்சி: பெள்ளாச்சியில் நடைபெற இருக்கும் கால்நடை வளர்ப்பு குறித்த 'வெற்றி நிச்சயம்' திறன் மேம்பாட்டு பயிற்சியை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை பொள்ளாச்சி கோட்ட உதவி இயக்குனர் சக்ளாபாபு கூறியிருப்பதாவது:
கால்நடை துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பொள்ளாச்சி கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தில், 'வெற்றி நிச்சயம்' என்ற தலைப்பில் கால்நடை வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடகிறது.
பயிற்சி வகுப்பில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 35 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் என, இருபாலர் நிபந்தனைக்கு உட்பட்டு கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாம், வரும், 17ம் தேதி முதல், ஞாயிறு நீங்கலாக, தொடர்ந்து, 20 நாட்கள், 25 பேருக்கு நடத்தப்படுகிறது.
பயோமெட்ரிக் வருகை பதிவு உறுதி செய்யப்படும். இதில், மாடு, ஆடு, பன்றி மற்றும் கோழி வளர்ப்பு, செல்லப்பிராணிகள் வளர்ப்பு, குஞ்சு பொறித்தல் என, கால்நடை வளர்ப்பு தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதற்கான திறன் மேம்பாட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அதனைப் பயன்படுத்தி வங்கிக் கடன் பெறலாம். தவிர, கால்நடைத்துறை வாயிலாக, 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். களப்பயிற்சியும் அளிக்கப்படுவதால் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். அதற்கு, அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி, கால்நடை டாக்டர் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
