/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலத்தடி நீரில் வேதித்தன்மை அதிகரிப்பதால் தண்ணீரும் மாறிப்போச்சுங்க! குறையும் சாகுபடியால் விவசாயிகள் வேதனை
/
நிலத்தடி நீரில் வேதித்தன்மை அதிகரிப்பதால் தண்ணீரும் மாறிப்போச்சுங்க! குறையும் சாகுபடியால் விவசாயிகள் வேதனை
நிலத்தடி நீரில் வேதித்தன்மை அதிகரிப்பதால் தண்ணீரும் மாறிப்போச்சுங்க! குறையும் சாகுபடியால் விவசாயிகள் வேதனை
நிலத்தடி நீரில் வேதித்தன்மை அதிகரிப்பதால் தண்ணீரும் மாறிப்போச்சுங்க! குறையும் சாகுபடியால் விவசாயிகள் வேதனை
ADDED : ஆக 07, 2024 11:38 PM

சூலுார் : நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீரில் உவர்ப்பு மற்றும் வேதி தன்மை அதிகரித்து வருவதாலும் சூலுார், சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் செம்மண், கரிசல் நிலங்கள் அதிகளவில் உள்ளன. பல ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள இந்த நிலங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு தென்னை, வாழை, சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆழ்துளை கிணற்று நீரே சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
ஆனால், சூலுார், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் பல கிராமங்களில் பருவ மழை போதிய அளவு பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஆழ்துளை கிணறுகளை மேலும் ஆழப்படுத்த விவசாயிகள் முயற்சிக்கின்றனர். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரில் உவர்ப்பு மற்றும் வேதித் தன்மை அதிகம் இருப்பதை கண்டு விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர்.
படியும் உப்பு
ஆழ்துளை கிணற்று நீரை தொடர்ந்து நிலத்தில் பாய்ச்சும் போது, வெள்ளை நிற உப்பு போன்ற படிமங்கள் வாய்க்காலிலும், விளை நிலங்களிலும் படிந்து விடுகின்றன. அந்த தண்ணீரை கால்நடைகளும் குடிப்பதில்லை. வேறு வழியில்லாமல் விவசாயிகள் அந்த நீரையே விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது.
மண் வளம் பாதிப்பு
உப்பு மற்றும் வேதித் தன்மை அதிகம் உள்ள நீரை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண்ணில் அமில நிலை, உப்பின் நிலை, அங்கக கரிமம் ஆகிய குணங்கள் கூடுதலாகி விடுகிறது.
இதனால், சாகுபடியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. தற்காலிக தீர்வாக, பயிர்களின் வளர்ச்சிக்கு ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதனால், மண்ணின் வளம் மேலும் பாதிப்படைகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
போதிய மழை இல்லாததாலும், மழை நீரை முறையாக நீர் நிலைகளில் சேமிக்க வழியில்லாததாலும், கிணற்று பாசனம் இல்லாமல் போய்விட்டது. வேறு வழியின்றி, லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயத்தை தொடர்ந்தோம்.
ஒரு சில வருடங்களில் அதிலும் தண்ணீர் குறைந்தது. சிறிது ஆழப்படுத்தினோம். அதில் இருந்து வரும் தண்ணீரில் உப்பு மற்றும் வேதிதன்மை அதிகம் உள்ளதால் சாகுபடி செய்ய முடியவில்லை.
தண்ணீரின் மாற்றத்துக்கு இயற்கையான காரணம் இருப்பதாக தெரியவில்லை. ஒரு பக்கம் நொய்யல் ஆறு உட்பட அனைத்து நீர் நிலைகளிலும் கழிவு நீர்தான் நிற்கிறது. மற்றொரு புறம் பார்த்தால் பெரிய, பெரிய தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளை ஆழ்துளை கிணறு அமைத்து அதற்குள் விடுவதாகவும் கூறுகிறார்கள். அவற்றை ஆய்வு செய்து தடுத்தால் தான் தண்ணீர் பழைய நிலைக்கு மாறும். அதற்கும் தீர்வு இல்லை என்றால் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டி சூழல் தான் ஏற்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.