/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிக்கு 20 சைக்கிள் வழங்கி உதவிக்கரம்; முன்னாள் மாணவர்கள் செயலால் நெகழ்ச்சி
/
அரசு பள்ளிக்கு 20 சைக்கிள் வழங்கி உதவிக்கரம்; முன்னாள் மாணவர்கள் செயலால் நெகழ்ச்சி
அரசு பள்ளிக்கு 20 சைக்கிள் வழங்கி உதவிக்கரம்; முன்னாள் மாணவர்கள் செயலால் நெகழ்ச்சி
அரசு பள்ளிக்கு 20 சைக்கிள் வழங்கி உதவிக்கரம்; முன்னாள் மாணவர்கள் செயலால் நெகழ்ச்சி
ADDED : நவ 15, 2024 09:37 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கல்வி பயில உரிய நேரத்துக்கு பஸ் வசதியில்லாமல் தவித்த மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் இணைந்து, சைக்கிள்கள் வாங்கி கொடுத்து உதவிக்கரம் நீட்டினர்.
பொள்ளாச்சி அருகே, கொல்லப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 151 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், ஏரிப்பட்டியில் இருந்து வரும் மாணவர்கள், பஸ் வசதியில்லாமல் சிரமப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு மேல் தான் பஸ் உள்ளதால், மாணவர்கள் பள்ளியிலேயே, 5:45 மணி வரை காத்திருந்து செல்கின்றனர்.
அதே போன்று, காலையில் சிறப்பு வகுப்புகளுக்கு முன்கூட்டியே வர வேண்டிய சூழலால், மூன்று கி.மீ., துாரம் நடந்தே பள்ளிக்கு வரும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
போதிய பஸ் வசதியில்லாததால், ஏரிப்பட்டி, அனுப்பர்பாளையம், சுந்தரகவுண்டனுார், பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி பள்ளிக்கு செல்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என ஆசிரியர்கள் உறுதியளித்து மாணவர்களை பள்ளியில் சேர்த்தனர்.
பஸ் வசதி ஏற்படுத்திக்கோரி பள்ளி நிர்வாகம், பெற்றோர் சார்பில், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை.
மாணவர்கள் உரிய நேரத்துக்கு வீட்டுக்கு செல்லவோ, பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளது.
சைக்கிள் வழங்கல்
இந்நிலையில், பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் உதவியை பள்ளி நிர்வாகத்தினர் நாடினர். அவர்களிடம், ஏரிப்பட்டியில் இருந்து, 20 மாணவர்கள் வருகின்றனர்.
பஸ் வசதி உரிய நேரத்துக்கு இல்லாததால் சிரமப்படுகின்றனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும். பெற்றோரும் அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். இதற்குரிய தீர்வு கிடைக்க உங்களால் முயன்ற முயற்சிகளை செய்யுங்கள் என தெரிவித்தனர்.
இதையடுத்து, முன்னாள் மாணவர்கள் இணைந்து, 20 பேருக்கு சைக்கிள்களை வாங்கி கொடுத்தனர்.
நன்றி தெரிவிக்கிறோம்!
பள்ளி தலைமையாசிரியர் சற்குணவதி கூறியதாவது:
முன்னாள் மாணவர்களிடம் பஸ் வசதி இல்லாதது குறித்து தெரிவித்தோம். அவர்களால் முடிந்த உதவிகளை செய்வதாக தெரிவித்தனர். தற்போது, 20 சைக்கிள்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.
முன்னாள் மாணவர் மன்றத்தினர் இணைந்து வழங்கிய சைக்கிள்கள் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், 1 - 20 என எண்கள் குறிப்பிட்டு, எந்த சைக்கிள் எந்த மாணவர், மாணவிக்கு வழங்கப்பட்டது என்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரிடம் இந்த விபரம் தெரிவித்து, 10ம் வகுப்பு முடித்ததும் சைக்கிளை சர்வீஸ் செய்து, பள்ளிக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது, மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டதால், மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
மாணவர்கள் கல்வி பாதிக்க கூடாது, வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்பதற்காக, முன்னாள் மாணவர்களுக்கு செய்த இந்த உதவிக்கு, நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு, கூறினார்.