/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு அரசு இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது'
/
'தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு அரசு இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது'
'தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு அரசு இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது'
'தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்கு அரசு இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது'
ADDED : ஜன 20, 2024 05:34 AM

அன்னூர்: ஒவ்வொரு ஆண்டும் ஜன. 19ம் தேதி காஷ்மீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஹிந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்டம், அன்னூரில் காஷ்மீர் தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், தொடர் வன்முறை காரணமாக காஷ்மீரை விட்டு வெளியேறிய ஹிந்து குடும்பங்கள் பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக மீண்டும் குடியேறி வருகின்றன.
அரசியல் சட்ட பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. சுற்றுலா அதிகரித்துள்ளது.
பலர் முதலீடு செய்து வருகின்றனர். 70 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கண்ட மோடிக்கு காஷ்மீர் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர், என்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நாளன்று மத்திய அரசு விடுமுறை அளித்துள்ளது. தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இதற்காக வருகிற 26ம் தேதி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
சேலத்தில் தி.மு.க., இளைஞரணி மாநாட்டுக்காக அரசு இயந்திரம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வாயிலாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ., தொகுதிக்கும் 10 பஸ் இலவசமாக அனுப்ப வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
மக்களின் வரி பணம் அரசியல் கட்சி மாநாட்டுக்கு செலவிடப்படுகிறது. இந்த மாநாட்டை தடை செய்ய வேண்டும்.
பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., மகன், மருமகள் இருவரும் பட்டியலின பெண்ணை சித்ரவதை செய்துள்ளனர் ஆனால் அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடிக்கின்றனர். விரைவில் வழக்கு பதிவு செய்யாவிட்டால் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
தி.மு.க., அரசின் ஊழல்களை அண்ணாமலை மட்டுமே எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அந்த கடமையிலிருந்து தவறிவிட்டது.
பல கோவில்களில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அறங்காவலர்களாக நியமிக்கின்றனர். கவர்னரை மிரட்டும் வகையில் தி.மு.க., நடக்கிறது. கவர்னர் செல்லும் வழியில் கருப்பு கொடி காட்டுவது, தாக்க முயற்சிப்பது என கவர்னரை மிரட்டி வருகின்றனர்.
மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டப்பட்டதாக உதயநிதி தவறாக கூறுகிறார். நீதிமன்றமே அனுமதி அளித்து முறையாக கோவில் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.