ஆழியாறு - வால்பாறை மலைப்பாதையில் கவனமாக போங்க!வனவிலங்குகள் நடமாட்டத்தால் எச்சரிக்கை
ஆழியாறு - வால்பாறை மலைப்பாதையில் கவனமாக போங்க!வனவிலங்குகள் நடமாட்டத்தால் எச்சரிக்கை
UPDATED : ஜூலை 15, 2026 05:32 PM
ADDED : ஜூலை 15, 2026 05:01 PM

பொள்ளாச்சி: ஆழியாறு - - வால்பாறை ரோட்டில், கவியருவி அருகே, யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, நகர்வுகளை கவனிக்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணியர் கவனத்துடன் செல்ல வேண்டும் என, வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆழியாறு அணை பகுதிக்கு உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி, வால்பாறை மலைப்பாதையை கடந்து வருகின்றன. ஆழியாறு கவியருவி அருகே ரோட்டோரத்தில் அவ்வப்போது யானைகள் கூட்டம் மேய்ச்சலில் ஈடுபடுவதுடன், அணைப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க குட்டிகளுடன் வருகின்றன.
கடந்த சில நாட்களாக வால்பாறை, நவமலை சாலையில் வனத்தில் இருந்து யானைகள் வெளியே வருவது அதிகரித்துள்ளது. இதனால், வனத்துறை அதிகாரிகள், சுற்றுலா பயணியரை சோதனை சாவடியில் எச்சரித்து அனுப்புகின்றனர்.
இந்நிலையில், ஆழியாறு சின்னார்பதி அருகே வால்பாறை ரோட்டில் குட்டி கொம்பன் என்கிற குட்டி யானை சென்று கொண்டு இருந்தது. அப்போது, வால்பாறையில் இருந்து ஆழியாறு நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை கண்டு காட்டு யானை உடம்பில் உள்ள புழுதி பறக்க ஆக்ரோஷமாக துரத்தியது. சாதுர்யமாக வாகனத்தை திருப்பி சென்றதால் நொடி பொழுதில் உயிர் தப்பினர். இதை சுற்றுலா பயணியர், வீடியோ எடுத்தது சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலானது.
மேலும், யானைகளை காணும் சுற்றுலா பயணியர் ஆர்வமிகுதியில் புகைப்படம், வீடியோ எடுக்கின்றனர். ஒரு சிலர் மொபைல்போனில் 'செல்பி' எடுக்க முயல்கின்றனர். யானைகளை காண்பதற்காக வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வீடியோ எடுக்க முயல்கின்றனர்.
வனத்தை விட்டு வெளியேறும் யானைகளை தொந்தரவு செய்யும் போது, அவை துரத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள சூழலில், கவனமுடன் சுற்றுலா பயணியர் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உணவு மற்றும் தண்ணீர் அருந்துவதற்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி, பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் அடிக்கடி யானை கூட்டம் செல்வதை தொடர்ந்து, சுழற்சி முறையில் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு யானை கூட்டம் நகர்வை கண்காணிக்கின்றனர். யானையை கண்டால், புகைப்படம், 'செல்பி' எடுக்க கூடாது.
கொண்டைஊசி வளைவுகளில் வாகன வேகத்தை குறைக்க வேண்டும். மலைப்பாதையில் வனவிலங்குகளை கண்டால் தொந்தரவு செய்யாமல் வழி விட வேண்டும். யானைகளை துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
