/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடையாள அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
/
அடையாள அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : பிப் 22, 2024 04:44 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில், காய்கறிகளை விற்பனை செய்ய, விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. புதிய விவசாயிகள் அடையாள அட்டை பெற்று பயன்பெற, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே, தமிழக அரசின் வேளாண்மை விற்பனைத் துறையின் உழவர் சந்தை செயல்படுகிறது; 78 கடைகள் உள்ளன.
மேட்டுப்பாளையம், அன்னுார், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள், தங்களது காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய, தற்போது விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷர்மிளா கூறுகையில், ''உழவர் சந்தையில், விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை கொண்டு வந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு, இலவச பஸ் வசதி செய்யப்படுகிறது. புதிய விவசாயிகள், அடையாள அட்டை பெற்று பயன்பெறலாம்,'' என்றார்.