அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஜி.எஸ்.டி.முறைப்படுத்த கோரிக்கை
அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஜி.எஸ்.டி.முறைப்படுத்த கோரிக்கை
ADDED : செப் 14, 2026 04:21 PM
கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூரில் 650 அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் மாதம் 75 டன் அட்டைப்பெட்டி உற்பத்தி செய்கிறது.
இதற்கான முக்கிய மூலப்பொருளாக உள்ள ‘கிராப்ட் பேப்பர்’ விலை உயர்ந்து வருவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக, தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க (சிக்ப்மா) துணைத்தலைவர் கதிர்வேலு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
கொரோனாவுக்கு முன் மூலப்பொருள் விலை ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ரூபாய் உயரும். இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு டன் கிராப்ட் பேப்பர் ரூ.6,000 உயர்ந்துள்ளது. உயர் ரக பேப்பர் விலை டன்னுக்கு ரூ.8,000 உயர்ந்துள்ளது.
மின் கட்டணமும் கடுமையாக உயர்கிறது. கூலியும் ரூ.700 லிருந்து ரூ.1,000 ஆக உயர்ந்துள்ளது. 18 சதவீதம் ஜி.எஸ்.டி.யில் கொள்முதல் செய்கிறோம். ஆனால் 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,யில் அட்டைப்பெட்டி விற்கிறோம்.
எப்படி தொழில் நடத்துவது எனத் தெரியவில்லை. கொள்முதலுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஐ.டி.ஐ., மூலம் ‘கோர்ஸ்’ கொண்டு வர வேண்டும்.
விற்பனை நிறுவனங்கள் எங்களுக்கான பேமென்ட் உடனடியாக தருவதில்லை. கோர்ட் சென்றும் தீர்வு கிடைக்கவில்லை. உற்பத்தி பொருட்களுக்கு உடனடியாக பேமென்ட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
