/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷாவில் மாட்டு பொங்கல் விழா கோலாகலம்
/
ஈஷாவில் மாட்டு பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 16, 2025 03:58 AM

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, மாட்டு பொங்கல் விழா கொண்டாட்டம், ஆதியோகி சிலை முன்பு நேற்று நடந்தது.
இதில், ஈஷாவை சுற்றியுள்ள மலைவாழ் மக்கள், ஈஷா ஆசிரமவாசிகள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து, மண் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
இதில், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து, பொங்கல் வைத்தும், மேளதாளங்கள் வாசித்து நடனமாடியும் மகிழ்ந்தனர்.
விவசாயத்தில் முக்கிய பங்காற்றும், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு, வழிபாடுகள் செய்யப்பட்டன.
குறைந்து வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 23 வகையிலான, நாட்டு மாடுகளின் கண்காட்சி நடந்தது.
மாலையில், தூத்துக்குடி சகா கலைக்குழுவினரின் ஒயிலாட்டம், பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7:20 மணிக்கு, ஆதியோகி திவ்ய தரிசனத்துடன், பொங்கல் விழா நிறைவடைந்தது.