வளர்ப்பு யானைகள் முகாம் நடக்கும் இடத்தை மாற்றுங்க...பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்
வளர்ப்பு யானைகள் முகாம் நடக்கும் இடத்தை மாற்றுங்க...பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்
UPDATED : ஜூன் 23, 2026 09:29 PM
ADDED : ஜூன் 23, 2026 09:22 PM

மேட்டுப்பாளையம்: யானைகள் முகாமை, வேறு இடத்தில் நடத்தும்படி, அரசுக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியில், ஐந்து ஆண்டுகளாக, யானைகள் முகாம் நடைபெறவில்லை. தற்போது த.வெ.க., ஆட்சியில் யானைகள் முகாம் நடத்த, வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்தனர். இது சம்பந்தமாக தமிழக விவசாயிகள் சங்க விவசாயிகள் ஆலோசனை கூட்டம், வனபத்ரகாளி அம்மன் கோவில் அருகே, தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமை வகித்து பேசியதாவது:
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, நெல்லிமலைப்பகுதியில், 15 ஆண்டுகள் யானைகள் முகாம் நடந்தன. முகாம் நடைபெறுவதற்கு முன்பு வரை, காட்டு யானைகள், நெல்லிமலைக்கு இடம் பெயர்ந்து வந்தது இல்லை. முகாம் வந்த பிறகு, வனப்பகுதியில் சுற்றிய யானைகள், நெல்லிமலைக்கு இடம் பெயர்ந்து வந்தன.
இந்த யானைகள் உணவைத் தேடி, மலையை சுற்றி உள்ள கிராமங்களில், விவசாய நிலங்களுக்கு சென்று வாழைகள், தீவனப்புல் மற்றும் மக்காச்சோளத்தட்டைகளை சாப்பிட்டு சேதம் செய்து வந்தன. யானைகளின் தொல்லையால், பாதித்த ஒவ்வொரு விவசாயிகளுக்கும், பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இதுவரை அரசு சார்பில் எவ்வித இழப்பீடும் வழங்கவில்லை. மேலும் யானை முகாம் நடந்த போது, யானைகள் மனித மோதல்களால், உயிரிழப்பு ஏற்பட்டது. கடந்த ஆட்சியில், ஐந்து ஆண்டுகளாக யானைகள் முகாம் இப்பகுதியில் நடைபெறவில்லை. இதனால் நெல்லிமலை பகுதியில் யானைகளின் நடமாட்டமும் முற்றிலும் குறைந்துள்ளன.
இந்நிலையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, நெல்லிமலை பகுதியில், இந்த ஆண்டு யானைகள் முகாம் நடத்த, அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இங்கு யானைகள் முகாம் நடத்தினால் காட்டு யானைகள் நெல்லிமலைக்கும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முகாமில் உள்ள கோவில் யானைகளுக்கு, பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். மேலும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாய பயிர்களை, காட்டு யானைகள் சேதம் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே யானைகள் முகாமை, திருச்சி மற்றும் வேறு இடத்திற்கு மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாநில தலைவர் பேசினார்.
யானைகள் முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, நாளை, (25ம் தேதி) மேட்டுப்பாளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு தாசம்பாளையம் ராஜேந்திரன் வரவேற்றார். தேக்கம்பட்டி காரமடை வட்டாரத் தலைவர் திப்பையன் முன்னிலை வகித்தார். நெல்லித்துறை சின்னராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் நெல்லிமலை, வனபத்ரகாளியம்மன் கோவில் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
