ADDED : மார் 16, 2025 12:16 AM
பணம் கேட்டு மிரட்டியவர் கைது
சொக்கம்புதுாரை சேர்ந்தவர் திவ்யேஷ், 28. அதே பகுதியை சேர்ந்தவர் பிரதாப், 26. அவரது நண்பர் நந்து, 26. இருவரும் போதையில் அடிக்கடி திவ்யேஷிடம் தகராறு செய்து வந்தனர். அவ்வப்போது, திவ்யேஷிடம் இருந்து பணம் பெற்று, மது குடித்து வந்தனர். கடந்த 13ம் தேதி இருவரும் மது குடிக்க திவ்யேஷிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். பின்னர், கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரதாப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழிப்பறி வாலிபருக்கு சிறை
பீளமேடு, காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் சாய் பிரேம், 29; டிரைவர். இவர் நேற்று முன்தினம், தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த காந்திமாநகர் பகுதியை சேர்ந்த சேகர், 24 மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், அவரை தாக்கினார். பின்னர், அவரிடம் இருந்து ரூ. 500 பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். சாய் பிரேம் அளித்த புகாரில், பீளமேடு போலீசார் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரசு பஸ் மோதி வாலிபர் பலி
சேலம், ஆத்துாரை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 20; நேற்று முன்தினம் மாலை அவிநாசி சாலை ஹோப் காலேஜ் அருகில், தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சங்ககிரியில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று, ஸ்ரீதரன் சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்றது. அப்போது, பஸ்சின் பின்பக்கம் ஸ்ரீதரனின் பைக்கில் மோதியது. இதில் அவர் கீழே விழ, பஸ்சின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. அருகில் இருந்தவர்கள் அவரை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
உக்கடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லங்கா கார்னர் ரயில்வே பாலம் அருகில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் இருந்தனர். அவர்களை போலீசார் சோதனை செய்த போது, அவர்களிடம் 100 கிராம் கஞ்சா இருந்துள்ளது. கஞ்சா வைத்திருந்த உக்கடம், இப்ராகிம் ஹாஜியா வீதியை சேர்ந்த முகமது ஐசக், 25 என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.