/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்களில் கத்தி கட்டி சேவல் சண்டை; சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
/
கால்களில் கத்தி கட்டி சேவல் சண்டை; சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
கால்களில் கத்தி கட்டி சேவல் சண்டை; சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
கால்களில் கத்தி கட்டி சேவல் சண்டை; சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
ADDED : ஜன 14, 2025 11:50 PM
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட புள்ளாக்கவுண்டன்புதூர், இச்சுக்குழி மலை அடிவாரத்தில், சட்டவிரோதமாக பணம் கட்டி,சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையின் மேற்கு புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், சண்டை சேவல் வளர்ப்பவர்கள் அதிகம்.
கத்தி கட்டிய சேவல் சண்டை, சேவல் சண்டை சூதாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டு முழுவதும், இப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், சட்டவிரோத சேவல் சண்டை சூதாட்டம் தொடர்பாக, ஒவ்வொரு மாதமும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, காருண்யா நகர், பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பல இடங்களில், போலீசாருக்கு தெரியாமலும், சில இடங்களில் போலீசாரின் ஆதரவுடனும், சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
சேவல் சண்டையில் ஈடுபடுத்தப்பட உள்ள சேவல்கள், ஒவ்வொன்றும், 2,000 முதல் 15,000 ரூபாய்க்கு பெற்று, அதனை தயார்படுத்தினர்.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட புள்ளாக்கவுண்டன்புதூர், இச்சுக்குழி மலை அடிவாரத்தில், சட்டவிரோதமாக பணம் கட்டி சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, நேற்று மாலை, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த புள்ளாக்கவுண்டன்புதூரை சேர்ந்த ஆனந்த்,39, பசுபதி,24, கவுதம்,28, தருண்,21, சண்முகசுந்தரம்,36, தேவராயபுரத்தை சேர்ந்த மணிகண்டன்,32, ராமலிங்கம்,54, நரசீபுரத்தை சேர்ந்த மனோகர்,44 ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.
தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து, 26,500 ரூபாய் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர்.