/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
"மறக்க முடியாதவர் கவிஞர் சிற்பி'
/
"மறக்க முடியாதவர் கவிஞர் சிற்பி'
ADDED : ஜூலை 31, 2011 03:04 AM
கோவை : சிலையின் அழகை ரசிப்பவன் சிற்பியை மறக்கலாம், கலையின் எழிலை
ரசிப்பவன் கலைஞனை மறக்கலாம், ஓவியத்தின் அழகை ரசிப்பவன் ஓவியனை மறக்கலாம்,
இந்த நூற்றாண்டில் கலை இலக்கியத்தில் கவிதையை படித்தவரும் ரசித்தவரும்
மறக்க முடியாதவர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் என்று, குன்றக்குடி
பொன்னம்பல அடிகளார் பேசினார். கோவை கிக்கானி மேல் நிலைப்பள்ளி, சரோஜினி
அரங்கில் கவிஞர் சிற்பியின் பவளவிழா நேற்று துவங்கியது. அருளாளர் வாழ்த்து
மங்கலம் என்ற அமர்வுக்கு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை
தாங்கி பேசியதாவது:இந்த பிறவியை மதித்து இதன் மூலம் வழங்க வேண்டிய நலன்களை
வளமாக வழங்குகின்ற பெருமைக்குரியவர் கவிஞர் சிற்பி. இவரை பாராட்ட
போற்றத்தக்க அருளாளர்களும், மூத்தோர்களும் இங்கு வந்திருப்பது
பொருத்தமானது.இது காலத்தால் மூத்த மொழியை பெற்றுள்ள பண்பு நிறைந்த நாடு,
இசையுணர்வும், கவியுணர்வும், சமய பண்புணர்வும் பெற்ற புலவர்கள் வாழ்ந்த
நாடு. அதனால்தான் இறைவனே, காசு கொடுத்து தமிழ் கேட்ட வரலாறு நமக்கு
இருக்கிறது. அப்படிப்பட்ட அருமையான தமிழ் மூலம், பல்வேறு கடமைகளை செய்ய
வேண்டிய கடமை நமக்குள்ளது. காரணம் இடைக்காலத்தில் ஏற்பட்ட சரிவுகளும்,
தளர்வும் தமிழ் புறக்கணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. மீண்டும்
அதை மக்களுக்குரியதாக மாற்றி சமூதாயத்தோடு இணைக்க, தமிழை தழைத்தோங்க செய்ய
வேண்டும்.
இந்த நாட்டுக்கு கிடைத்த பெருமையே சான்றோர்களும், நல்லோர்களும்தான்.
அறிஞர்களையும், கவிஞர்களையும் போற்றுவது நம் மரபு. தன் வளமான கவிதை மூலம்
தமிழுக்கு, கொங்கு நாட்டுக்கும் வளம் சேர்த்துள்ள கவிஞர் சிற்பியை
பாராட்டுவது பெரியோர்களின் கடமை.இவ்வாறு, சாந்தலிங்க ராமசாமி அடிகளார்
பேசினார்.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியது: சிலையின் அழகை ரசிப்பவன்
சிற்பியை மறக்கலாம், கலையின் எழிலை ரசிப்பவன் கலைஞனை மறக்கலாம்,
ஓவியத்தின் அழகை ரசிப்பவன் ஓவியனை மறக்கலாம், இந்த நூற்றாண்டில் கலை
இலக்கியத்தில் கவிதையை படித்தவரும் ரசித்தவரும் மறக்க முடியாதவர் கவிஞர்
சிற்பி பாலசுப்பிரமணியம்.
கொங்கு மண்ணில் இன்னொரு செம்மொழி மாநாடு போல் நடக்கும் இந்த பவள விழாவில்
பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. மகத்தான கவிதைகளை படைத்து தனி முத்திரை
பதித்தவர் சிற்பி. 'வீட்டில் குறட்டை விட்ட செந்தமிழர் விழிக்க வெற்றி
இலக்கியம் அங்களித்த பாரதிபோல் பாட்டை திறக்கவந்த பைந்தமிழ் பாவாணர் பெற்று
வாழ்க' என்று, பாவேந்தர் தந்த வரிகள்தான் சிற்பியின் அடையாளம். அதனால்தான்
கடந்த 50 ஆண்டுகளாக பாரதியையும், பாவேந்தரையும்போல் மானுடம் போற்றும்
கவிஞராக சிற்பி விளங்குகிறார், என்றார்.பழனி சாது சாமிகள் திருமடம் சாது
சண்முக அடிகளார், காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேசுவர சுவாமிகள், தென்சேரி
மலை திருநாவுக்கரசு மடாலயம் முத்துச்சிவராமசாமி அடிகளார், பேரூர் ஆதீனம்
மருதாசல அடிகளார், ஸ்ரீலலிதாம்பிகா அறக்கட்டளை ஸ்ரீஜெகநாத சுவாமிகள்,
கவிஞர்கள், இலக்கியவாதிகள் பேசினர்.

