/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரக்கு வாகனங்களால் நெரிசல்; கண்டுகொள்ளாத போலீசார்
/
சரக்கு வாகனங்களால் நெரிசல்; கண்டுகொள்ளாத போலீசார்
ADDED : மே 26, 2025 04:49 AM
வால்பாறை; சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட எல்லையில், வால்பாறை அமைந்துள்ளது. சுற்றுலா நகரமான இங்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணியர் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
தற்போது கோடை சீசன் நடந்து வருவதால், நகரமே சுற்றுலா பயணியரால் களை கட்டியுள்ளது. அங்கு, வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வால்பாறை நகரம் அமைந்துள்ளது.
புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து போஸ்ட் ஆபீஸ் வரையுள்ள ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.
இது தவிர சுற்றுலா வாகனங்களும் ரோட்டில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், சமீப காலமாக சரக்கு வாகனங்கள் பகல் நேரங்களில் நடுரோட்டில் நிறுத்தி, பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் செல்லும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீசாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பார்க்கிங் வசதி வேண்டும்
சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால், நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு சுற்றுலாவரும் வாகனங்கள் நிறுத்த வசதியாக சட்டசபையில், அமைச்சர் தெரிவித்தபடி, 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அண்ணாதிடலில் கார்ப்பார்க்கிங் வசதியுடன் கூடிய மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்பது, சுற்றுலாபயணியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை மாவட்ட நிர்வாகமும், இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.