/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேச்சு
/
ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேச்சு
ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேச்சு
ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேச்சு
ADDED : டிச 31, 2024 04:36 AM
கோவை : கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது; மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், ''தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. அனைத்து பகுதிக்கும் பரவலாக வளர்ச்சி பணிகள் செய்தால் மட்டுமே மக்கள் ஆதரவு அளிப்பார்கள். 'மெட்ரோ ரயில்' திட்டத்தை மலுமிச்சம்பட்டி வரை நீட்டித்து, சுந்தராபுரம் வழியாக உக்கடத்துக்கு இணைப்பு பாதை கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
78வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி: டிரோன் சர்வே எடுப்பதுபோல், கவுன்சிலர்களின் வார்டுகளில் என்னென்ன வேலை நடந்திருக்கிறதென ஒரு 'சர்வே' எடுங்கள். பொது நிதியில் எந்த வேலையும் நடக்கவில்லை.
45வது வார்டு கவுன்சிலர் பேபி சுதா: கவுண்டம்பாளையம் கிடங்கில் குப்பை கொட்டக் கூடாது. 20 வார்டு குப்பையை கொட்டுகின்றனர். ஐந்து வார்டு பொதுமக்கள் பிரச்னை. குப்பையை கொட்டக் கூடாது என கூறினால், நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா. ஆட்சிக்கு ஏன் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறீர்கள்.
12வது வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி: கட்டடங்கள் மறுஅளவீடு செய்யும் 'டிரோன் சர்வே' பணியை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள். அமைச்சரிடமும் கூறியிருக்கிறோம். பொதுமக்களிடம் கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது.
மத்திய மண்டல தலைவர் மீனா: ஸ்மார்ட் சிட்டி' என்கிறோம்; இன்னமும் 'பாய்' வைத்து குப்பை அள்ளுகின்றனர். சூயஸ் நிறுவனத்தினர் ரோடுகளை குதறி வைத்திருக்கின்றனர். உயிரிழந்தால் மட்டுமே விபத்து அல்ல; பலருக்கும் கை, கால் உடைந்திருக்கிறது. அந்நிறுவனத்தாரை யார் 'பாலோ அப்' செய்கிறார்கள்.
வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா: எங்களது வார்டில் பாதாள சாக்கடை பணி இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது. மழை நீர் வடிகால் வசதியில்லை.
11வது வார்டு கவுன்சிலர் சிவா: தெருநாய் பிரச்னை ஜாஸ்தியாக இருக்கிறது. ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து, தீர்வு காண வேண்டும்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பதிலளிக்கையில், ''மாநகராட்சி சார்பில் பொது நல வழக்கு தொடர முடியாது; நீங்கள் தனிப்பட்ட முறையில் தொடரலாம்,'' என்றார்.
72வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் பேசுகையில், ''கோவை 'மெட்ரோ ரயில்' திட்டத்தை மருதமலை அடிவாரத்தில் துவக்கி, ஆர்.எஸ்.புரம் வழியாக காந்திபுரம் வரை இணைப்பு பாதை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.