ADDED : செப் 05, 2026 04:20 AM
தீக்குளிக்க முயன்ற டிரைவர்
கோவை: இருகூரை சேர்ந்தவர் பெரியசாமி,40; ஆட்டோ டிரைவர். நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் திடீரென உடலில் கெரசின் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபரை மீட்டு ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். மது போதையில் இருந்த அவர், தன்னை சிலர் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பூ மார்க்கெட்டில் தகராறு
ஆர்.எஸ்.புரம்: பூ மார்க்கெட் ரோட்டில் சுதா, 32, லட்சுமி, 42, ஆகியோர் பூ வியாபாரம் செய்கின்றனர். இருவருக்கும் பூ விற்பதில் போட்டி ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டனர். ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சண்டை போட்டதால் ஆர்.எஸ்.புரம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
பூட்டிய வீட்டில் நகை திருட்டு
சிங்காநல்லுார்: அலமேலு நகரை சேர்ந்தவர் ராமராஜ். வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த கம்மல், மோதிரம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது. புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை, பணம் திருட்டு
பீளமேடு: சேரன் மாநகர், செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் ஆகாஷ் கார்த்திக். வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டு கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 கிராம் தங்கம், 1.25 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. புகாரின் பேரில் பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
மகள் கண்முன் தாய் பலி
பி.என்.புதுார்: கோகுலம் காலனியில் வசித்து வந்தவர் லட்சுமி,70. நேற்று முன்தினம் மகள் சுமதியுடன் ஸ்கூட்டியில் சென்றார். வேலாண்டிபாளையம், திரு.வி.க.நகர் சந்திப்பில் சரக்கு ஏற்றி வந்த லாரி ஸ்கூட்டி மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட லட்சுமி, லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியானார். மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி டிரைவர் புகழேந்தி,36 மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் சோதனை
கோவை: மாநகர போலீசார், பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். சாய்பாபாகாலனி, கோவில் மேடு, காந்திபுரம் 4வது வீதி, சவுரிபாளையம் பஸ் ஸ்டாப், உடையம்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக, ஹரிகரன்,21, ரகுநாதன், 33, குமார்,42, தினேஷ் குமார், 22 மீது வழக்கு பதிவு செய்தனர்.
