ADDED : ஜூன் 15, 2026 11:31 PM
வெள்ளிக்கடை கொள்ளையர் சிக்கினர் சிவானந்தா காலனி கேதன், காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், சில்வர் பிளாசா என்ற வெள்ளி பொருட்கள் கடை நடத்தி வருகிறார். ஏப். 7 ம் தேதி இரவு கடையின் ஏ.சி.யை உடைத்து அதன் வழியாக நுழைந்து பொருட்களை திருடினர்.
காட்டூர் போலீசார் விசாரித்து, ராஜஸ்தானுக்கு சென்று, அங்கு உ.பி.யை சேர்ந்த ராகுல்சிங்,28, சோனுகுஷ்வா,33 ஆகியோரை கைது செய்தனர். 78 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.
கஞ்சா வேட்டை தொடர்கிறது சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பாழடைந்த திருமண மண்டபம் அருகில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற நீலிகோணம்பாளையம் கமலேஷ்,25, மனோஜ்குமார் , 23, கைது செய்யப்பட்டனர். 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுக்கரை போலீசார் ஈச்சனாரி பை-பாஸ் ராஜ் விஜய் நகரில் சென்ற போது அங்கு நின்றிருந்த இருவரை அழைத்தனர். இருவரும் ஓடினர். துரத்திய போலீசார் ஒருவரை பிடித்தனர். அவர் திண்டுக்கல், நாகையகோட்டை செந்தில்குமார், 24, நாகசக்தி அம்மன் கோவில் பின்புறம் தங்கி, கஞ்சா விற்பது தெரிந்தது. 2.2 கிலோ கஞ்சாவுடன் அவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய உப்பிலிபாளையம் குகனை தேடுகின்றனர்.
10 லிட்டர் கள் விற்பனை தடுப்பு மதுக்கரை போலீஸ் எஸ்.எஸ்.ஐ. சசிகுமார் போலீசாருடன் மரப்பாலம் பகுதியில் ரோந்து சென்றார். தோப்பு தோட்டம் அருகே நின்றிருந்த ஒருவரை விசாரித்தார். அவர் பெயர்
செல்வகுமார், 45. அவரிடம் 10 லிட்டர் கள் இருந்தது. அதை வாங்கி செல்ல ஆட்கள் வருவார்கள் என்றார். கள்ளுடன், செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.
வாலிபரை கடத்தியவர்கள் கைது ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த கமலேஷ்,27, தனது காரை மணியகாரம்பாளையம் சுரேஷ், 49, என்பவரிடம் அடகு வைத்தார். இதற்காக 1.30 லட்சம் பெற்றார். இந்நிலையில், அடகு வைக்கப்பட்ட கார் காணாமல் போய்விட்டதாக கூறி, பணத்தை திருப்பி தருமாறு சுரேஷ் மற்றும் இவரது நண்பர் ரஞ்சித்,25, ஆகியோர் தகராறு செய்தனர். கமலேஷ் மறுத்ததால்,அவரை கடத்தி சென்று மணியகாரம்பாளையத்திலுள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். புகாரின் பேரில், சுரேஷ், ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தவறவிட்ட பணம் கிடைத்தது பி.என்.புதுாரை சேர்ந்தவர் கிருஷ்ணன். ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டிலுள்ள கனரா வங்கியில் ரூ.1.60 லட்சம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். தவறுதலாக, ரூ.40 ஆயிரம் கீழே விழுந்தது. வீட்டுக்கு வந்து பார்த்த போது தெரிந்தது. ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். 50 சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஒருவர் பணத்தை எடுத்து செல்வது தெரிந்தது. அவரை தொடர்பு கொண்ட போது அவர், 'வெளியூர் சென்றதால், போலீசில் ஒப்படைக்க முடியவில்லை' என்றார். அவரிடமிருந்து பணம் பெறப்பட்டு கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
லாரி ஆபீசில் சூதாட்டம்: 4 பேர் கைது வி.எச்.ரோடு போலீசார், தேர் நிலை திடல் அருகிலுள்ள டிரான்ஸ்போர்ட் ஆபீசில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சீட்டு கெட்டு வைத்து சூதாடிய போடி அன்பரசன்,33, கள்ளக்குடி புகழேந்தி,32, ராமநாதபுரம் மாவட்டம் மூர்த்தி,35, பால்பாண்டி,42, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 21,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதிகளுக்கு ஜி.எச்.ல் பாதுகாப்பு சிறை கைதிகளுக்கு சிகிச்சை வழங்க, அரசு மருத்துவமனையில் பிரத்யேக பிரிவு உள்ளது. அது சீரமைப்பு செய்யப்படுவதால், கைதிகளுக்கு பொது வார்டில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெற்ற, பீமுடு அஜித்குமார், 31 என்ற கைதி சமீபத்தில் தப்பி ஓடினார். இதனால், அங்குள்ள 2 கைதிகளுக்கு, வார்டுக்குள் நான்கு போலீசாரும், வெளியே ஒருவருமாக 5 பேர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
பைக் விபத்தில் மாணவன் பலி கணுவாயில் வசித்தவர் ராகுல் பிரதான், 19. தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங், 2ம் ஆண்டு படித்து வந்தவர். நண்பர்களுடன் ஆனைகட்டி ரோட்டில் பைக்கில் சென்றபோது, மைல்கல் மீது மோதி, அருகே இருந்த வேப்ப மரம் மீது தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்; சிகிச்சை பலனின்றி இறந்தார். தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
