ADDED : ஆக 16, 2026 05:21 PM
மது தராததால் பாட்டிலால் தாக்குதல் ரேஸ்கோர்ஸ்: செல்வபுரத்தை சேர்ந்தவர் சூர்யா. நண்பர்களுடன் கோபாலபுரத்தில் மது குடித்துக்கொண்டிருந்த போது, அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர் மதுக்குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தனர். சூர்யாவின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கி தப்பினர். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி மீது தாக்குதல் துடியலுார்: வெள்ளக்கிணற்றில், உள்ள இரும்பு கடையில் பணிபுரிந்தவர், விஜயபிரகாஷ். 40 நாட்களுக்கு முன், வீரபாண்டி பிரிவில் உள்ள வேறு கம்பெனிக்கு மாறினார். பழைய நிறுவன உரிமையாளர் முருகலிங்கம் அவரது நண்பர்கள் மதுசூதன், பழனிசாமிக்கும், விஜயபிரகாஷ்க்கும் தகராறு ஏற்பட்டது. மூவரும் விஜயபிரகாஷை தாக்கினர். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.12.29 லட்சம் மோசடி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுதர்சன். வீட்டிலிருந்தபடியே கூகுள் விமர்சனங்களை பதிவிட்டு பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவல் அவரது டெலிகிராமுக்கு வந்தது. இதை நம்பி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.12.29 லட்சம் அனுப்பினார். பின்னர் அது மோசடி என தெரிந்தது. புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வெளிநாட்டு வேலை மோசடி கணபதியை சேர்ந்த ஹைலதா ஷெரீன், வேலை தேடி இணையதளங்களில் விண்ணப்பித்தார். அவரிடம் ஆயுஷ்சிங் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், சீன விமானநிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில், நேர்காணல் நடத்தினார். போலி பணிநியமன ஆணை, விசா அனுப்பினார். பல்வேறு கட்டங்களாக, ரூ.7.91 லட்சத்தை மோசடி நபர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பினார். அதன் பின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வங்கி ஊழியரிடம் ரூ.17.50 லட்சம் மோசடி தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆத்மராம். சமூகவலைத்தளம் வாயிலாக, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என சிலர் கூறியதை நம்பி, 11 தவணைகளில், ரூ.17.50 லட்சம் பல வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். போலி இணையதளத்தில் லாபம் என காட்டிய பணத்தை எடுக்க முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
புகையிலை பொருட்கள் பறிமுதல் பெரியகடைவீதி, கவுண்டம்பாளையம், செல்வபுரம், போத்தனுார் மற்றும் சிங்காநல்லுாரில் போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த தெலுங்குபாளையம் செல்வகுமார், புதுக்கோட்டை கோகுலன், 19 செல்வபுரம் விஜயன், ராஜஸ்தான் மஹிந்திரா தாஸ், ராமநாதபுரம் மகாலிங்கம் கைது செய்யப்பட்டனர்.
ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது துடியலுார்: உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த சதிஸ்குமார் மீது ஏற்கனவே பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. அதில் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆஜராகாததால், துடியலுார் போலீசார் புதிய வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
டிரைவர், கண்டக்டர் கைது சரவணம்பட்டி : சரவணம்பட்டி– துடியலுார் ரோட்டில் வந்த இரு தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இடையே ‘டைமிங்’ பிரச்னையால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு தனியார் பஸ் டிரைவர் செங்காளிபாளையத்தை சேர்ந்த இளங்கோ, கண்டக்டர் நல்லாம்பாளையம் விக்னேஷ்வரன் மற்றொரு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தனர். அந்த பஸ் டிரைவர் ஈரோடு சரண் புகாரில், போலீசார் இளங்கோ, விக்னேஷ்வரனை கைது செய்தனர்.
துாங்கியவர்களிடம் போன், பணம் பறிப்பு செல்வபுரம் : சொக்கம்புதுாரை சேர்ந்த தர்மலால் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, தலையணைக்கு அடியில் வைத்திருந்த மொபைல்போன், பையிலிருந்த பணம் காணாமல் போனது. புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ரூ.5,450 ரொக்கம் மற்றும் 2 போன்களை மீட்டனர்.
தண்ணீர் தொட்டியில் மூழ்கி பெண் பலி பீளமேடு : எல்லைத்தோட்டம் ரோட்டை சேர்ந்த பெண் வேலுமணி. தனியாக வசித்து வந்தார். குடும்பத்தினர் அவரை பலமுறை தொடர் கொள்ள முயற்சித்தனர். அருகில் இருந்தவர்களை சென்று பார்க்க அறிவுறுத்தினர். உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றபோது, பெண் அங்கு இல்லை. வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக கிடந்தார். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது உக்கடம் : பெரியகடை வீதி போலீசார் ரோந்து சென்ற போது, புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, புதுக்கோட்டை அஸ்வின், திருப்பூர் விமல்குமார், ஆகியோரை கைது செய்தனர். 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மாத்திரைகள் பறிமுதல் குனியமுத்துார் : போலீசார் நேற்று முன்தினம் கோவைபுதுார், தொட்டராயன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை விசாரித்தனர். அவர் குனியமுத்தூர், காயிதே மில்லத் வீதியை சேர்ந்த சகாபுதீன், 26 என்பதும், விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா, போதைக்காக பயன்படுத்தும் டெபன்டடால் மாத்திரைகள், 750 வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார் கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
