UPDATED : ஆக 30, 2026 06:53 PM
ADDED : ஆக 30, 2026 06:52 PM
பீளமேடு: சவுரிபாளையம் வனிதா, தனியார் மருத்துவமனை நர்ஸ். பெற்றோர் உடையாம்பாளையம் பகுதியில் சொந்த வீட்டில் வசிக்கின்றனர். அந்த வீட்டின் ஒரு பகுதியில் உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த, மணியும் மனைவி அனிதாவும் வாடகைக்கு இருந்தனர். வனிதாவின் தாய் நாச்சியம்மாளுக்கும் அனிதாவிற்கும் சில நாட்களுக்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டதால் 27ம் தேதி வீட்டை காலி செய்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில், 28ம் தேதி அனிதா நாச்சியம்மாளை தாக்கியுள்ளார். காயம் ஏற்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் அனிதாவை கைது செய்தனர்.
போக்சோ குற்றவாளி தலைமறைவு
ராமநாதபுரம்: கவுண்டம்பாளையம் கிருஷ்ணமூர்த்தி, போக்சோ வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ஜூன் 5 முதல் கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். கிருஷ்ணமூர்த்தி மீது ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுகின்றனர்.
வீடு வாங்கித்தருவதாக மோசடி
வடவள்ளி: கல்வீரம்பாளையம் பத்மபிரியா, பி.என்.புதுார் பகுதியில் வெங்காய வியாபாரம் செய்கிறார். அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி சரவணன் அறிமுகமானார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி 2.50 லட்சம் வாங்கியுள்ளார். வீடு வாங்க உதவவில்லை, பணத்தை திருப்பி தராமல் மிரட்டல் விடுத்ததாக புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
மது குடித்த 11 பேர் மீது வழக்கு
கோவை: போலீசார் ரோந்து பணியின் போது, குற்றம் அதிகம் நடைபெறும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்கின்றனர். பெரும்பாலான குற்றச்சம்பவங்களில் பொது இடங்களில் குடித்துவிட்டு தகராறு செய்பவர்கள் காரணமாக உள்ளனர். இதனால், பொது இடங்களில் மது அருந்துபவர்களை தொடர்ந்து எச்சரித்து அனுப்புகின்றனர். நேற்று முன்தினம் இரவு நடந்த சோதனையில், 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
