மொபட் திருட்டு
அன்னூர் அருகே ஆலாம்பாளையத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் முருகன், 45. எலக்ட்ரீசியன்.
இவர் கடந்த 8ம் தேதி காலை அன்னூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை ஒட்டி தனது மொபட்டை நிறுத்திவிட்டு வெளியே சென்றுள்ளார். மாலையில் வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே மொபட் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆடு திருட முயன்றவர்கள் கைது
கருமத்தம்பட்டி அடுத்த சேட பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 54. ஆடு, கோழி வளர்த்து வருகிறார். இவர் வீட்டுக்கு சம்பவத்தன்று அதிகாலை வந்த நான்கு பேர், ஆடுகளை திருட முயன்றனர். சத்தம் கேட்டு சுப்பிரமணி வெளியில் வந்தார். அவரை பார்த்ததும், நால்வரும் தப்பி ஓட முயன்றனர்.
அதில், ஒருவர் மட்டும் பிடிபட்டார். விசாரணையில், அவர் இச்சிப்பட்டியை சேர்ந்த தீபக் ராஜா, 19 என்பது தெரிந்தது. அவர் கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அன்னூர் அடுத்த வடக்கலூரை சேர்ந்த அருள் பிரகாஷ்,36, கரவழி மாதப்பூரை சேர்ந்த பாண்டியன், 30 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அருள் பிரகாஷ் மீது அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில், அடிதடி வழக்கு மற்றும் ஆடு திருட்டு வழக்குகள் உள்ளது. போலீசார் மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சாலை விபத்தில் மருந்தாளர் பலி
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பரணிதரன், 27. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளராக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு 10:20 மணி அளவில் காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பரணிதரன் தனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்த சிறிய ரக சரக்கு வாகனம், பைக் மீது மோதியது. இதில் பரணிதரன் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
படுகாயங்களுடன் இருந்த அவரை பொதுமக்கள் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.----