UPDATED : ஆக 19, 2026 04:00 PM
ADDED : ஆக 19, 2026 03:51 PM
அன்னுார்: 'கடந்த 20 ஆண்டு கோரிக்கையான தாசப்பாளையத்திற்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, கோவை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
கஞ்சப்பள்ளி ஊராட்சி தாசப்பாளையத்தில், 300 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், இங்கு அரசு டவுன் பஸ் வசதி இல்லை. தாசப்பாளையத்திலிருந்து அன்னுாருக்கு, அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என, 20 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் சதீஷ்குமார், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில், 'இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவியர், ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அன்னுாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர். கல்லுாரிகளுக்கு, மேட்டுப்பாளையம், கோவை மற்றும் திருப்பூர் செல்கின்றனர். பஸ் வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அரசு மருத்துவமனைக்கும், வேலைக்கு செல்லவும், பலரும், அன்னுாருக்கு பஸ் வசதி இல்லாமல் தவிக்கின்றனர். அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
கோவை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், 'தங்கள் கோரிக்கையின் அடிப்படையில், தாசப்பாளையத்தில் பயணிகளின் வருகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வருகை உறுதி செய்யப்பட்டவுடன், அருகில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கிளை வாயிலாக காலை மற்றும் மாலை நேரங்களில், ஒரு நேரத்துக்கு இரண்டு முறை புதிய பஸ் சேவையை துவக்குவதற்கான முன்மொழிவு, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன், விரைவில் பஸ் சேவை துவக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
