/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் அலங்கார விளக்குகள்
/
ரயில்வே ஸ்டேஷனில் அலங்கார விளக்குகள்
ADDED : ஆக 28, 2025 11:04 PM

பொள்ளாச்சி,;பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில்வே சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலைநோக்கு பார்வையில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.அதில், பயணிகளுக்கு உண்டான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத்திறன் பயணியருக்கு வசதி ஏற்படுத்துதல், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டடங்கள் கட்டப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்கி மேம்படுத்தப்படுகிறது.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் தலா, 15 சந்திப்புகள் மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது.அதில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு செய்தல், 7.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
வாகன நிறுத்தப்பகுதிகளில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. முகப்பு பகுதி முழுவதுமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. முகப்பு பகுதியில் பூங்கா போன்று அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியில், 100 அடி உயரத்தில் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஸ்டேஷன் வளாகம் முழுவதும், மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே ஸ்டேஷன்கள் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், ஸ்டேஷன் நுழைவுவாயில் மேம்படுத்தப்பட்டு, மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இப்பணிகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.