/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை வழங்குவதில் தாமதம் பயனாளிகள் வேதனை
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை வழங்குவதில் தாமதம் பயனாளிகள் வேதனை
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை வழங்குவதில் தாமதம் பயனாளிகள் வேதனை
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை வழங்குவதில் தாமதம் பயனாளிகள் வேதனை
ADDED : டிச 31, 2024 04:45 AM
உடுமலை: சமூக நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில், முதிர்வு தொகையை தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், சமூக நலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டமும் உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியும், இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர், குழந்தைகளின் மூன்று வயது நிறைவுபெறுவதற்குள் திட்டத்தில், பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆண் வாரிசு இல்லாமலும், பெற்றோருக்கு திருமண வயது நிறைவடைந்தும் இருப்பதும் அவசியம். இக்குழந்தைகளுக்கு, அரசின் சார்பில் வைப்பு தொகையாக, தலா 15 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது.
குழந்தைகளின் ஆறு வயது முதல் 15 வயது வரை குறைந்தபட்சமாக, 150 ரூபாய் முதல் வட்டித்தொகை ஆண்டுதோறும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது, அதற்கான விதிமுறைகளையும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகளுக்கு, 18 வயது நிறைவடையும் தருணத்தில், அவர்களுக்கான தொகை வழங்கப்படும். குறைந்தபட்சமாக, 30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், 18 வயது நிறைவுபெறாமல், அந்த குழந்தைகள் திருமணம் செய்துகொண்டால், திட்டத்தில் பயன்பெற முடியாது. பயனாளிகளாக உள்ளவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே முதிர்வு தொகையை பெற முடியும்.
திருப்பூர் மாவட்டத்தில், குடிமங்கலம், உடுமலை உட்பட சில வட்டாரங்களில் கடந்த இரண்டாண்டுகளாக நிறைவுதொகை வழங்கப்படாமல், 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் காத்திருக்கின்றனர்.
இத்திட்டத்தில் பெரும்பான்மையான விண்ணப்பதாரர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களாக உள்ளனர். திட்டத்தில் முதிர்வு தொகையை விரைந்து வழங்க பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே முதிர்வு தொகையை பெற முடியும். பலரும் விதிமுறைகளை அறிந்துகொள்ளாமல் விண்ணப்பிக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு முடிக்காமல் திருமணம் செய்துகொண்டும் தொகையை கேட்கின்றனர். இவ்வாறு உள்ளவர்களுக்கு திட்டம் பொருந்தாது.
தகுதி உள்ள பயனாளிகளின் பட்டியல் தொடர்ந்து அனுப்பப்படுகிறது. தற்போது இந்த திட்டத்துக்கு பெரிதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில் முழுமையாக அனைத்து பயனாளிகளுக்கும் முதிர்வு தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, கூறினர்.