/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடவள்ளியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
/
வடவள்ளியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
ADDED : மார் 12, 2026 04:49 AM

வடவள்ளி: வடவள்ளி,வி.என்.ஆர். நகரில் 1980ல் 2 லே-அவுட்டுகள் உருவாகின. ஒன்றில், பொது பயன்பாட்டுக்கு 5 சென்ட் 220 சதுரடி, பூங்காவுக்கு 11 சென்ட் 144 சதுரடி, கடைக்கு 4 சென்ட் 116 சதுரடி ஒதுக்கப்பட்டது. மற்றொரு லே-அவுட்டில் பொது பயன்பாட்டுக்கு 32 சென்ட் 400 சதுரடி ஒதுக்கப்பட்டது.
இரண்டு லே-அவுட்டிலும் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கிய இடத்தில், 38 சென்ட் ஆக்கிரமித்து, 3,500 சதுரடியில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என பள்ளிகட்டடம், 2,550 சதுரடியில் இரண்டு வீடுகள் கட்டப்பட்டன.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, வி.என்.ஆர்.நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர், ஐகோர்ட்டில் 2017ல் வழக்கு தொடர்ந்தனர். 2024ல் சங்கத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடங்களை காலி செய்து வெளியேறினர்.
விதிமுறைப்படி கட்டடங்களை இடிக்க வேண்டிய மாநகராட்சி அதை செய்யாமல், கட்டடங்களை வேறு உபயோகத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டது. பொது ஒதுக்கீடு இடத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் உறுதியாக இருந்ததால், 2 ஆண்டுக்கு பின் கட்டடங்களை இடிக்கும் பணி நேற்று துவங்கியது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.9.50 கோடி ரூபாய்.

