ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: எதிர்ப்பால் பாதியில் நிறுத்தம்
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: எதிர்ப்பால் பாதியில் நிறுத்தம்
UPDATED : ஆக 27, 2026 06:30 PM
ADDED : ஆக 27, 2026 06:22 PM

அன்னுார்: ரூ.1 கோடி மதிப்புள்ள பொது பயன்பாட்டு இட ஆக்கிரமிப்பை அகற்றும் பணி, சிலர் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தப்பட்டது.
காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி, கெம்பநாயக்கன்பாளையத்தில், ஸ்ரீ சாய் அன்பு நகரில், பூங்காவுக்கு என 19 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். நேற்று, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி தலைமையில், ஊராட்சி செயலாளர் ஸ்ரீபதி உட்பட அலுவலர்கள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவக்கினர்.
போலீஸ் எஸ்.ஐ.,கள் கனகராஜ், மோகன் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 20 சதவீதம் அளவுக்கு ஆக்ரமிப்பு அகற்றப்பட்டது. மீதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஆக்ரமிப்பு செய்திருந்த சிலர், ஊராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். 'இதே நகரில் வேறொரு பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளது. அதை அகற்றாமல் இங்கு மட்டும் ஏன் அகற்றுகிறீர்கள். அதை அகற்றினால் தான் இங்கு ஆக்கிரமிப்பை அகற்ற அனுமதிப்போம்' எனக்கூறி, பெண்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் நீண்ட நேரம் சமாதானப்படுத்தியும் எதிர்ப்பை கைவிடவில்லை. இதையடுத்து ஊராட்சி அலுவலர்கள், 'நாளை (இன்று) கூடுதல் பெண் போலீசார் பாதுகாப்போடு, மீதமுள்ள 80 சதவீத பொதுப் பயன்பாட்டு இட ஆக்கிரமிப்பு அகற்றப்படும்' என தெரிவித்தனர்.
