/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே பணியில் வட மாநில தொழிலாளர்கள் "வேளை'க்கு கிடைக்காத "வேலை' ஆட்கள்
/
ரயில்வே பணியில் வட மாநில தொழிலாளர்கள் "வேளை'க்கு கிடைக்காத "வேலை' ஆட்கள்
ரயில்வே பணியில் வட மாநில தொழிலாளர்கள் "வேளை'க்கு கிடைக்காத "வேலை' ஆட்கள்
ரயில்வே பணியில் வட மாநில தொழிலாளர்கள் "வேளை'க்கு கிடைக்காத "வேலை' ஆட்கள்
ADDED : ஆக 12, 2011 11:31 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பாலக்காடு அகல ரயில்பாதை திட்டப்பணிகளை
மேற்கொள்ள, உள்ளூர் வேலையாட்கள் பற்றாகுறையால், வடமாநிலங்களிலிருந்து
தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
போத்தனூர் - திண்டுக்கல் அகல
ரயில்பாதை திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில், 55
கி.மீ., தூரம் அகல ரயில்பாதையாக மாற்றப்படுகிறது; இதற்காக, 165 கோடி
மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பொள்ளாச்சி -
முதலாமடை, முதலாமடை - பாலக்காடு என இரு பிரிவுகளாக பிரித்து பணிகள்
நடக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு முதல், தொடர்ந்து மூன்றாண்டுகளாக நடந்து
வரும் பணியில், போதிய நிதி ஒதுக்காததால் தொய்வு ஏற்பட்டது. பின், 2010,
2011ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், திட்டத்துக்கு
தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளை வேகப்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால்,
உள்ளூரில் வேலையாட்கள் கிடைப்பது அரிதாக உள்ளதால், மந்தமாக இருந்தது.
இப்பகுதியில், 166 சிறு மற்றும் பெரிய பாலங்கள் கட்டும் பணி மட்டுமே 70
சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2012 மார்ச் மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு
செய்ய ரயில்வே துறை கெடு விதித்துள்ள நிலையில், வேலையாட்கள் பற்றாக்குறையாக
உள்ளதால், ஒப்பந்ததாரர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், ஒப்பந்ததாரர்கள்
மூலம், வட மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, பொள்ளாச்சி - முதலாமடை வரை
வேகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால்,
பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் 75 சதவீத
பணிகள் நிறைவு செய்தவுடன், கேரளப்பகுதிகளில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது;
இதற்கிடையில், முதலாமடை - பாலக்காடு வரை, சிறு மற்றும் பெரிய பாலங்கள்
கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
போத்தனூர் - திண்டுக்கல் அகல ரயில்பாதை திட்டத்தில், பழநி - திண்டுக்கல்
வரை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில்
வெள்ளோட்டம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சி -
பாலக்காடு, பொள்ளாச்சி - பழநி வழித்தடப் பணிகளை வேகப்படுத்தி, வரும்
2012க்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்கள்
பற்றாக்குறையால், வட மாநில தொழிலாளர்கள் மூலம் பொள்ளாச்சியில் பணிகள்
நடக்கின்றன. இப்பகுதியில், பணிகள் நிறைவடைந்தவுடன், இதே தொழிலாளர்களை
கொண்டு கேரளப்பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது,
பொள்ளாச்சியில் நடந்து வரும் புதிய ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகளை,
நடப்பாண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொள் ளாச்சி -
பாலக்காடு வழித்தடத்தில் பணிகள் மேற்கொள்ள தேவையான தளவாட பொருட்கள்
அனைத்தும் தயார் நிலையில் உள்ளதால், இருக்கும் தொழிலாளர்களை கொண்டு
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

