/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் துவங்கியது தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சி! ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்
/
கோவையில் துவங்கியது தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சி! ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்
கோவையில் துவங்கியது தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சி! ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்
கோவையில் துவங்கியது தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சி! ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்
ADDED : மார் 27, 2025 07:06 AM

கோவை : 'தினமலர்' நாளிதழ், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், உயர் கல்விக்கான வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி, கோவையில் நேற்று துவங்கியது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வமுடன், கல்வியாளர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.
என்ன படித்தால் எதிர்காலத்தில், தங்கள் பிள்ளைகள் வளமுடன் இருப்பர் என்பதே, இன்றைய பெற்றோரின் தேடலாக உள்ளது. இவர்களின் தேடலுக்கு, கல்வியாளர்களின் துணையுடன் துல்லியமான வழியை காட்டுகிறது, 'தினமலர்' நாளிதழ்.
'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி, கோவை கொடிசியா 'இ' அரங்கில் நேற்று துவங்கியது.
கண்காட்சியை, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மலர்விழி, ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரி, தலைவர் தங்கவேல், ரத்தினம் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் மதன் செந்தில், திருப்பூர் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி தாளாளர் அருணா ஸ்ரீ தேவி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, கோவை எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கோவை அமிர்தா விஷ்வ பீடம் பேராசிரியர் ரமேஷ்குமார், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லுாரி செயலாளர் யசோதாதேவி, டாக்டர் என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மதுரா பழனிசாமி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், கார்ப்போரேட் ரிலேஷன்ஸ் இயக்குனர் பானு ஆகியோர், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.
காலை 10:00 மணிக்கு துவங்கிய கருத்தரங்கில் பிரபல கல்வியாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். இதில் பங்கேற்க, 9:00 மணிக்கே மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வரத்துவங்கினர். மாலை 6:30 மணி வரை கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது.
138 ஸ்டால்களில் தகவல்
வழிகாட்டி நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் சார்பில், 138 ஸ்டால்கள், இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்டால்களில் அந்தந்த கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகள், குறித்து பெற்றோர், மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
காலை, மாலை அமர்வுகளில் மாணவர்களுக்கு கேள்வி, பதில் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக பதில் அளித்த மாணவர்களுக்கு, லேப்-டாப், இருவருக்கு டேப், 10 பேருக்கு 'டிஜிட்டல் வாட்ச்' பரிசாக வழங்கப்பட்டன.
கருத்தரங்கை, 'தினமலர்' நாளிதழுடன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. பக்கபலமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா பல்கலையும், அசோசியேட் ஸ்பான்சராக ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரியும் உள்ளன.
ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, கே.எம்.சி.எச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், கற்பகம் கல்வி நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், ரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கோவை சி.எம்.எஸ்., கல்வி நிறுவனங்கள், திருப்பூர் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி, ராஜலட்சுமி தொழில்நுட்பக்கல்லுாரி, இந்திய பட்டயக்கணக்காளர்கள் இன்ஸ்ட்டிடியூட் இணைந்து வழங்குகின்றன.
நிகழ்ச்சியில், மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரோபோட்டுகளின் செயல்விளக்கம் நடந்தது. முன்னதாக, இந்த ரோபோ, பேச்சாளர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றது.