ADDED : செப் 18, 2026 04:21 AM

அன்னுார்: 'கல்வியுடன் ஒழுக்கம் மிகவும் முக்கியம்,' என தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் சிவக்குமார் தெரிவித்தார்.
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, நடப்பாண்டு, அன்னுாரை சேர்ந்தவரும், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது.
இவர் கூறியதாவது:
கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசு மற்றும் ரூட்ஸ் நிறுவனங்கள் முழுமையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி உள்ளன. 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். முழு நேரமாக இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, கழிப்பறை, பள்ளி வளாகம், ஆய்வகம் என அனைத்து பகுதியையும் தூய்மையாக வைக்கின்றனர். துாய்மையான பகுதி மாணவர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைப்படி, ஒவ்வொரு வாரமும் சிறு தேர்வு நடத்தப்படுகிறது. வாரந்தோறும் நடக்கும் தேர்வுகளால் பொது தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களிடம் தேர்வு குறித்த அச்சம் நீங்குகிறது. மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்க, மூன்று விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர் வாயிலாக, அவர்களிடம் உள்ள தனித்திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன.
கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். உடலை உறுதியாக வைத்துக் கொண்டால், கற்றலும் எளிதாகும் என்பதால், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்துகிறோம். மாணவர் படிப்புடன் ஒழுக்கம் மிகவும் அவசியம்.
பள்ளி நிர்வாகங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு பெற்றால் மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை செய்து தர முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
