/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குடும்ப ஆட்சியில் தி.மு.க.,வினர் அடிமைகள்'
/
'குடும்ப ஆட்சியில் தி.மு.க.,வினர் அடிமைகள்'
ADDED : ஜன 25, 2024 05:52 AM

உடுமலை: ''மொழிப்போரை வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., தியாகிகளை கண்டு கொள்ளாமல், கருணாநிதி பெயரை துாக்கிப்பிடித்து வருகின்றனர்'', என சீமான் பேசினார்.
உடுமலையில், நாம் தமிழர் கட்சி சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழை வைத்து, மொழிப்போரை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், அதனை கண்டு கொள்ளவில்லை. மொழிப்போர் தியாகிகளுக்கு தி.மு.க., அரசு, எந்த விதமான நினைவு அரங்கங்களும் அமைக்கவில்லை. ஆனால், கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைக்கின்றனர். எங்கும் தமிழ் இல்லை; திராவிடஆட்சிகளால், தமிழ், இனம் அழிக்கப்படுகிறது.
லஞ்சம், ஊழல், மது திணிப்பு என அனைத்தையும் சகித்துக்கொள்வதால், அவர்கள் குடும்பம் பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்து வைத்து, குடும்பம் ஆள்கிறது. கட்சியினர் அடிமைகளாக உள்ளனர். எந்த மொழியும் கற்பது தவறில்லை; தாய் மொழியில் பேச வேண்டும்; உணர்வுடன் இருக்க வேண்டும். சின்னத்தை பார்த்து வாக்களிக்கக்கூடாது ; எண்ணத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை வர வேண்டும். சமச்சீர் பாடத்திட்டம் உள்ளது; ஆனால், தமிழகத்தில், சமச்சீர் கல்வி இல்லை. மதுக்கடையை அரசு நடத்துகிறது. ஆனால், கல்வியை வியாபாரமாக்கியுள்ளது.
சேலம் மாநாட்டிற்கு, 58 கோடி நிதி திரட்டி, 50 ஆயிரம் தன்னார்வலர்களை நியமித்த தி.மு.க., வுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமில்லை. இவ்வாறு, பேசினார்.