/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்! பாலத்தை கடக்க சிக்கல்: அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் சோகம்
/
வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்! பாலத்தை கடக்க சிக்கல்: அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் சோகம்
வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்! பாலத்தை கடக்க சிக்கல்: அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் சோகம்
வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்! பாலத்தை கடக்க சிக்கல்: அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் சோகம்
UPDATED : மார் 11, 2026 09:06 AM
ADDED : மார் 11, 2026 05:59 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன் பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கீழ் மட்ட பாலத்தில் பிரம்மாண்ட குடிநீர் குழாய்கள் செல்வதால், பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அவலம் நீடிக்கிறது.
காரமடை அருகே உள்ள அத்திக்கடவு, பவானி ஆற்றுப் பகுதி ஆகிய இடங்களில் இருந்து பில்லூர் ஒன்று, இரண்டு, மூன்று குடிநீர் திட்டங்களும், கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டமும், தொண்டாமுத்தூர் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான குடிநீர் குழாய்கள் காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு வழியாக கோவை நகர் மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளுக்கு செல்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கீழ்மட்ட பாலத்தை ஒட்டி இரண்டு பக்கமும் தலா இரண்டு பிரம்மாண்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட திட்டமிட்ட நிலையில், அதற்கான அஸ்திவாரம் அமைக்க கீழ்மட்ட பாலத்தை ஒட்டிய பகுதியில் இருந்த பிரம்மாண்ட குடிநீர் குழாய்களை அகற்றி, அப்பகுதியில் பிரம்மாண்டமான கான்கிரீட் தூண்களை நிறுவி, உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் வேலை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்தது. அப்போது பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் தற்காலிக ஏற்பாடாக குடிநீர் குழாய்களை, கீழ்மட்ட பாலத்தின் ஓரத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் இரண்டு பிளாட்பார்ம் பகுதிகளிலும் கொண்டு சென்றனர்.
உயர் மட்ட மேம்பாலம் முழுமையாக கட்டி முடித்த பின், பழையபடி கீழ் மட்ட பாலத்தை ஒட்டிய வெளிப்புற பகுதியில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
ஆனால், பாலம் கட்டி முடித்து மூன்று ஆண்டுகள் ஆன பின்பும், இதுவரை கீழ்மட்ட பாலத்தில் உள்ள குடிநீர் குழாய்களை பாலத்துக்கு ஒட்டிய வெளிப்புற பகுதியில் மாற்றி அமைத்து தராமல், பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் இழுத்தடித்து வருகின்றனர்.
இது குறித்து, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் கூறுகையில்,' பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல பெரும் சிரமம் உள்ளது. பாலத்தின் ஓரத்தில் மண் குவியல் கிடக்கிறது.
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தில் செல்லும் பிரம்மாண்ட குடிநீர் குழாய்களை அகற்றி, பாலத்தின் வெளிப்புறமாக கொண்டு செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் தலையிட்டு குடிநீர் குழாய்களை கீழ்மட்ட பாலத்தின் வெளிப்புறத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

