தென்னையில் நீரா பானம் உற்பத்தி மேம்படுத்த ... எதிர்பார்ப்பு ! அரசு உதவிக்கு காத்திருக்கும் உற்பத்தியாளர்கள்
தென்னையில் நீரா பானம் உற்பத்தி மேம்படுத்த ... எதிர்பார்ப்பு ! அரசு உதவிக்கு காத்திருக்கும் உற்பத்தியாளர்கள்
UPDATED : ஜூன் 18, 2026 05:45 PM
ADDED : ஜூன் 18, 2026 05:41 PM

பொள்ளாச்சி: தமிழகத்தில், தென்னையில் நீரா பானம் உற்பத்திக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி தொழில் வளம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த, 2018ம் ஆண்டு தென்னையில் நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்காக, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 23 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீரா பானம் உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டது.
தற்போது உற்பத்தியாளர்கள் போதிய தொழில்நுட்ப வசதிகள் கிடைக்காமல் திணறுகின்றனர். இதற்குரிய நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் கூறியதாவது:
நீரா உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அரசு அனுமதி வழங்கியது. நீராபானத்தில் மதிப்புகூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்பட்டது. நீரா உற்பத்திக்காக துவங்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதன்பின், வாரியம் வாயிலாக உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.
உற்பத்தியில் சிக்கல், போதிய உதவிகள் கிடைக்காததால், 19 நிறுவனங்கள், நீரா உற்பத்தியை கைவிட்டு விட்டன. தற்போது, நான்கு நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. உற்பத்தியை மேம்படுத்த போதிய வழிவகைகள் செய்யாததால், உற்பத்தியாளர்கள் திணறும் நிலை உள்ளது.
நீரா பானம் உற்பத்தி செய்தவுடன், ஐஸ் பேக்கில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே வைக்க முடியும். இதனால், நீரா சர்க்கரை போன்ற உடலுக்கு நன்மை தரும் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் முடியாத நிலை உள்ளது.
எனவே, நீரா பானம் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். நீரா பானம், தேங்காய் பால் போன்வை அரசு நிகழ்ச்சிகள், அதிகாரிகள் கூட்டங்களில் வழங்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, நீரா உற்பத்தியாளர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து அதற்குரிய தீர்வு காண முன்வர வேண்டும். சந்தைப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கி தருதல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தினால், உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்குரிய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
